Skip to main content

கிரில் பட்டறை உரிமையாளர் உயிரிழந்த வழக்கில் அம்பலமான உண்மை

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

The truth exposed case of grill workshop owner passed away

 

சேலத்தில் இரும்பு கிரில் பட்டறை உரிமையாளரை தீர்த்துக்கட்ட ஈரோட்டைச் சேர்ந்த கூலிப்படை கும்பலை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.    

 

சேலம் செவ்வாய்பேட்டை நரசிம்மன் செட்டி சாலையைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர் பள்ளப்பட்டி ஜவஹர் மில் அருகே கோரிக்காடு பகுதியில் இரும்பு கிரில் பட்டறை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சிவக்குமாரும் அவருடைய ஊழியர்கள் சாரதி (19), பாஸ்கர் (45) ஆகியோரும் வழக்கம்போல் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மூன்று பேர் திடீரென்று பட்டறைக்குள் புகுந்து, சிவக்குமாரை  சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த ஊழியர்களையும் வெட்டினர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைப் பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர். பலத்த காயம் அடைந்த மூன்று பேரும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

முதல்கட்ட விசாரணையில், நிலத்தகராற்றில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிவக்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தெரிய  வந்தது. சிவக்குமாருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் திருமலைகிரியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் குடியிருந்து வந்துள்ளார். சிவக்குமாரின் தந்தை இறந்துவிட்டதை அடுத்து, ஏழுமலை குடியிருந்து வந்த வீட்டை விற்பனை செய்ய இருப்பதால் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார். அப்போது ஏழுமலை தரப்பில், வீட்டை தானே வாங்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட சிவக்குமார், வீட்டை 25.90 லட்சம்  ரூபாய்க்கு விற்க சம்மதித்துள்ளார். 

 

மேலும், ஏழுமலையிடம் இருந்து முன்பணமாக 4.90 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார். ஆனால் மீதப்பணத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார் ஏழுமலை. இதற்கிடையே வீட்டின் சந்தை மதிப்பு தற்போது 90 லட்சம் ரூபாயாக உயர்ந்து விட்டதாகக்கூறி, சிவக்குமார் கூடுதல் தொகை கேட்டதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே இருதரப்பினருமே அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் சமரசம் செய்ததை அடுத்து, ஏழுமலை மேலும் 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மீதமுள்ள 16 லட்சம் ரூபாயை ஜனவரி இறுதிக்குள் தருவதாகவும் ஒப்புக்கொண்டிருந்தார்.  ஆனாலும் வீட்டை கிரயம் செய்வது தொடர்பாக ஏழுமலையின் மருமகன் பாபு, சிவக்குமாருக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.       

 

இந்நிலையில் ஏழுமலையின் மருமகன் பாபுதான் ஈரோட்டைச் சேர்ந்த கூலிப்படை கும்பலை 1.50 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி, சிவக்குமாரை தீர்த்துக்கட்ட அழைத்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஜன. 31 ஆம் தேதி பள்ளப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பவரிடம் நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி  முனையில் அவரிடம் இருந்த 1900 ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்ததில் பாபு, விமல்ராஜ், கிஷோர், மாரியப்பன் ஆகியோர்தான் வழிப்பறியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இவர்களில் மாரியப்பன் தலைமறைவாகிவிட்ட நிலையில் மற்ற மூன்று பேரை கைது செய்தனர். கிரில் பட்டறை உரிமையாளர் சிவக்குமார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த பாபு வழிப்பறி வழக்கில் சிக்கிக் கொண்டது தெரிய வந்தது. இவர்களுடன் பிடிபட்ட கிஷோர் என்ற வாலிபர்தான், கூலிப்படை கும்பலைச் சேர்ந்த ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து சிவக்குமாரின் பட்டறை அருகில் இறக்கிவிட்டுச் சென்றதும் தெரிய வந்தது. மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.  இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கூலிப்படை கும்பலைத் தேடி தனிப்படை காவல்துறையினர் ஈரோடு மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.