Skip to main content

குப்பை தரம் பிரிக்கும் மையத்தை இடமாற்றம் செய்ய மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் 

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

trichy stem park issue makkal needhi maiam 

 

திருச்சியில் அமைந்துள்ள ஸ்டெம் பூங்காவின் முகப்பு பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தை  வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய மநீம கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

 

இது குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரும், திருச்சி மண்ணின் மைந்தருமான சர் சி.வி.ராமன் அவர்களது பெயரில் திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் பஞ்சக்கரை சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 15.55 கோடி ரூபாயில் பிரம்மாண்ட பொருட்செலவில் குழந்தைகளின் அறிவு திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது "ஸ்டெம் பூங்கா". ஆனால், பல கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்டெம் பூங்கா முகப்பு பகுதியில் திருச்சி மாநகராட்சியின் குப்பை தரம் பிரிக்கும் மையம் தொடர்ந்து துர்நாற்றத்துடன், கொசு உற்பத்தி மையமாக செயல்பட்டு வருகிறது.

 

திருச்சி மாநகர மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டிய திருச்சி மாநகராட்சி பூங்காவில் கட்டணம் கொடுத்து விளையாட வரும் சிறுவர், சிறுமியர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டாமா? மேலும் குழந்தைகளுக்கு பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என்பதோடு, குழந்தைகளுக்கு எளிதில் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரியாதா? இந்த ஸ்டெம் பூங்கா முகப்பு பகுதியிலேயே குப்பை தரம் பிரிக்கும் மையம் தொடர்ந்து செயல்பட்டால் எந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை கடும் துர்நாற்றம் மற்றும் கொசு கடிக்கிடையே இந்த பூங்காவிற்கு அழைத்து வருவார்கள்? காசு கொடுத்து எந்த பெற்றோர் நோய்த் தொற்றை தங்களது குழந்தைகளுக்கு விலைக்கு வாங்கத் துணிவார்கள்?

 

மேலும், இந்த குப்பை தரம் பிரிக்கும் மையத்தால் பொதுமக்களின் வரி பணத்தில் பல கோடி ரூபாய் பொருட்செலவில் துவங்கப்படும் ஒரு நல்ல திட்டம் அதன் இலக்கை அடைய முடியாமல் போக வாய்ப்புள்ளது. எனவே, மக்களின் இன்னல்களுக்கு உடனடி தீர்வு கண்டு வரும் திருச்சி மேயர் திரு.மு.அன்பழகன், சிறந்த மருத்துவரான திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள ஸ்டெம் பூங்கா முகப்பு பகுதியில் உள்ள இந்த குப்பை தரம் பிரிக்கும் மையத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து உரிய உத்தரவிட மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.” எனக் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.