Trichy Kannur VAO caught in the bribe case

Advertisment

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் மகன் பார்த்திபன். பொறியியல் பட்டதாரியான இவர், சொந்தமாக ஜே.சி.பி. வாகனம் வைத்துத்தொழில் செய்து வருகிறார். இவரது வாகனத்தினை விராலிமலையைச் சேர்ந்த இவரது நண்பர் ரங்கசாமி என்பவரிடம் கடந்த 2001 ஆம் ஆண்டு வாடகைக்கு விட்டுள்ளார்.

ரங்கசாமி, பார்த்திபனின் ஜே.சி.பி. வாகனத்தை பார்த்திபனுக்குத்தெரியாமல் விற்றுவிட்டார். இதனை அறிந்த பார்த்திபன், ரங்கசாமி மீது கடந்த 19.3.2022 அன்று மீது புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் புத்தாநத்தம் காவல்துறையினர் பார்த்திபனின் ஜே.சி.பி. வாகனத்தைக் கண்டுபிடித்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மணப்பாறை நீதிமன்றத்தில் இருந்து தனது ஜே.சி.பி. இயந்திரத்தைத்திரும்ப பெற இயலாத பார்த்திபன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதன் பேரில் உயர்நீதிமன்றம், 5 லட்சரூபாய்க்கு சொத்து மதிப்புச் சான்றிதழ் மணப்பாறை நீதிமன்றத்தில் வழங்கிவிட்டு, இயந்திரத்தைப் பெற்றுக்கொள்ள பார்த்திபனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே பார்த்திபன், சொத்துமதிப்புச் சான்றிதழ் வேண்டி மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 6.7.2023 அன்று விண்ணப்பம் செய்தார்.

Advertisment

அந்த விண்ணப்பம் கண்ணூர் கிராம நிர்வாக அலுவலரிடம் வந்துள்ளது. இதனை அறிந்த பார்த்திபன், நேற்று 24.7.23 காலை 10 மணிக்கு கண்ணூர் கிராம நிர்வாக அலுவலர் அமீர்கானைச் சந்தித்து சொத்து மதிப்புச் சான்றிதழ் பெறப் பரிந்துரை செய்யக் கோரியுள்ளார். அதற்கு கண்ணூர் வி.ஏ.ஓ. அமீர்கான், ரூ. 6,000 லஞ்சமாகக் கொடுத்தால் சொத்துச் சான்றிதழ் கிடைப்பதற்குப் பரிந்துரை செய்வதாகக் கூறியுள்ளார். பிறகு பேரம் நடந்து ரூ. 5,000 கொடுத்தால் மட்டுமே சொத்து மதிப்புச் சான்றிதழ் வழங்கப் பரிந்துரை செய்ய முடியும் என்று வி.ஏ.ஓ. அமீர்கான் கட்டாயமாகக் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பார்த்திபன் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்ததன் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீசாருடன் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின்படி பார்த்திபன், கண்ணூர் ஊராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இன்று 25.7.23 காலை சுமார் 11 மணியளவில் சென்று வி.ஏ.ஓ. அமீர்கானிடம் ரூ. 5,000 லஞ்சமாகக் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமீர்கானைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.