திருச்சி செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் திருச்சி புத்தகத் திருவிழாவினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று மாலை தொடங்கி வைத்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகமும், நேஷனல் புக் ட்ரஸ்ட்-ம் இணைந்து செப்டம்பர் 16 முதல் 25 வரை இந்த திருச்சி புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழா நிகழ்வில், கவிஞர் நந்தலாலா எழுதிய "திருச்சி ஊறும் வரலாறு" என்ற நூலினை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 160 புத்தக அரங்குகளும், 150க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் புத்தகங்களும் விற்பனைக்கு வரப்பெற்றுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கோளரங்கம், வான் நோக்குதல் மாணவர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இயல், இசை, நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திருச்சி மாவட்ட எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்காக தனி புத்தக விற்பனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் மாலை நேரத்தில் மனதை கவர்ந்திடும் வகையில் பல்வேறு பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும், திருச்சி மாவட்ட அறிஞர்கள், எழுத்தாளர்களையும் பாராட்டிச் சிறப்பிக்கப்படுகின்ற நிகழ்வும் நடைபெறுகின்றன. திருச்சி புத்தகத் திருவிழா செப்டம்பர் 16 வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை வரை 10 நாட்கள் தினசரி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.