Skip to main content

புயலில் இழந்த மரங்களை மீட்க நெடுஞ்சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகள் கவனிப்பின்றி கருகும் அவலம்

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

கடந்த 2018 நவம்பர் 16 ந் தேதி அதிகாலை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டது. விடியும் போது ஒட்டு மொத்த மரங்களும், மின்கம்பங்களும், விளை பயிர்களும், வீடுகளும் உடைந்து தரைமட்டமாக கிடந்தது. வீட்டைவிட்டு வெளியே போக வழியில்லை. மொத்த வாழ்க்கையும் அழிந்துவிட்டதாக உணர்ந்தார்கள் மக்கள்.

சில மணி நேரம் அமைதியாக இருந்த இளைஞர்கள் அரிவாளுடன் களமிறங்கினார்கள். சாலைகளில் விழுந்துகிடந்த மரங்களை வெட்டி அகற்றினார்கள். சில நாட்களில் மொத்த போக்குவரத்தையும் விட்டனர். அத்தோடு நிற்காமல் இழந்த மரங்களை மீட்க வேண்டும் என்பதை உணர்ந்த இளைஞர்கள் கிராமங்கள் தோறும் அடுத்தடுத்து லட்சக் கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கினார்கள். நீடாமங்கலம் பகுதியில் வேகமாக வளரக் கூடிய மரப்போத்துகளை நட்டு வளர்த்து வருகின்றனர். அதன் பிறகு எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள், விதைப் பந்துகள் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 

Tree planting on highway to restore lost trees in storm

 

சமீபத்தில் கூட அமைச்சர் விஜயபாஸ்கர் தனக்கு யாரும் சால்வை அணிவிக்க வேண்டாம். மரக்கன்றுகள் நட்டு வளருங்கள் என்றார். இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் சாலை ஓரங்களில் நின்ற ஆயிரக்கணக்கான புளி, ஆல், அரசு, வேலா போன்ற மரங்கள் சாய்ந்துவிட்டதையறிந்து கிராமங்கள் தோறும் இளைஞர்கள் மரக்கன்றுகுள் நடப்படுவதைப் பார்த்து நெடுஞ்சாலை ஓரங்களில் உயரமான மரக்கன்றுகளை நட்டு ரூ. 50 செலவில் கூண்டுகளை வைத்து பாதுகாப்பதுடன் வாரத்தில் சில நாட்கள் தண்ணீர் ஊற்றினார்கள் நெடுஞ்சாலைப் பணியாளர்கள். அதனால் அந்த மரக்கன்றுகள் வேகமாக வளரத் தொடங்கியது. இதை நக்கீரன் உள்பட பல பத்திரிகைகளும் செய்திகாள வெளியிட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நெடுஞ்சாலை ஓரங்களில் நட்டனர். அப்போது மழை பெய்தது. கூண்டு அமைத்து சில நாட்கள் தண்ணீர் ஊற்றினார்கள்.
 

தற்போது.. ஆலங்குடிக்கு கிழக்கு பகுதியில் வழக்கம் போல தண்ணீர் ஊற்றப்படுகிறது. ஆனால் ஆலங்குடிக்கு மேற்கே விராலிமலை வரை கன்றுகளுக்கு தண்ணீரும் ஊற்றவில்லை. கன்றுகளை பராமரிக்கவும் இல்லை. கூண்டுகள் உடைந்து கிடக்கிறது. தண்ணீர் இன்றி மரக்கன்றுகள் வாடி வதங்கி கருகிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இளைஞர்கள் நட்ட மரக்கன்றுகளை பாதுகாத்து வருகிறார்கள். நெடுஞ்சாலை ஓரங்களில் இழந்த மரங்களை மீட்க பல லட்சம் அரசுப் பணத்தை எடுத்து செலவிட்ட நெடுஞ்சாலைத்துறை நட்ட கன்றுகளை பராமரிக்காமல் இப்படி பாதியில் விட்டதால் அத்தனை மரக்கன்றுகளும் கருகும் நிலைக்கு வந்துவிட்டது. 

 

kaja strom


கோடைக்கு வாரத்திற்கு ஒரு நாள் தண்ணீர் ஊற்றினால் கூட அந்தக் கன்றுகள் பிழைத்துக் கொள்ளும். இல்லை என்றால் அரசாங்க பணம் அத்தனையும் இழப்பு தான். இதை அதிகாரிகள் உணர்ந்தால் நல்லது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் உயிர் போகும் நிலையில் உள்ள மரக்கன்றுகளை உயிர் காக்கலாம். திருவாரூர் மாவட்டத்தில் கிரீன் நீடா அமைப்பினர் சாலை ஓரங்களில் வைத்துள்ள மரபோத்துகள் நல்ல நிலையில் துளிர்விட்டுள்ளதால் கோடை வெயிலை சமாளிக்க லாரியில் கொண்டு வந்து தண்ணீர் ஊற்றுகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் பெரிய மரங்களாக வளரும். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில்?

தனக்கு பரிசுக்கு பதிலாக மரக்கன்றுகள் கொடுங்கள், மரக்கன்றுகளை நட்டு வளருங்கள் என்று சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கரின் கல்லூரி இருக்கும் விராலிமலை சாலையில் மேட்டுச்சாலை பகுதியில் தான் அதிகமான மரக்கன்றுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. தினமும் அந்த வழியாக பயணிக்கும் அமைச்சர் அதை கவனிக்கவில்லை போல.. இனியாவது அந்த மரக்கன்றுகளின் உயிர் காக்க உத்தரவிட்டால் நல்லது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.