அதிமுகவில் ஜூன் 23ஆம் இருந்த நிலையே நீடிக்கும். எனவே ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பொதுக்குழுக் கூட்டம் நடத்தவேண்டும். தனிக்கூட்டம் கூடக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ''கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு அதிமுகவின் வெற்றியே பிரதானம் என செயல்படலாம்'' என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் நேற்றைய தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ''அவர் அடிக்கடி அழைப்பு கொடுப்பார். ஏற்கனவே தர்மயுத்தம் போனாரு.. யார எதிர்த்து போனாரு. இப்போ அவர்களுக்கும் ஒன்றாக சேர்ந்து செயல்படலாம் என்று அழைப்பு கொடுக்கிறார். அவருக்கு பதவி வேணும். பதவி இல்லாமல் இருக்க முடியாது. எங்கும் உழைப்பு கிடையாது ஆனால் பதவி மட்டும் வேணும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி வேணும் அதுதான் அவருக்கு முக்கியம். அன்று தலைமை கழகத்தை அடித்து நொறுக்கி ரவுடிகளுடன் வந்து ஆவணங்களை அள்ளிச் சென்றார் ஓபிஎஸ். அவருடன் எப்படி இணைவது. திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என அதிமுக நினைக்கும் நிலையில் திமுகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கும் இவரை எப்படித் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவரது மகன் முதல்வரைச் சந்தித்து ஆட்சி நன்கு நடைபெறுவதாக புகழ்வது அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது. நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படுபவன் அல்ல. சொந்த காலில் பதவிகளைப் பெற்றேன்'' என்றார்.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து டி.டி.வி.தினகரன், 'தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்பட வேண்டும் என்ற பன்னீர்செல்வத்தின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே' எனத்தெரிவித்துள்ளார்.