Skip to main content

சில்லறை கொடுப்பதில் பெண்ணிடம் தகராறு! ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!  

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

 Transport workers struggle not to give way to ambulances!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று வந்தது. ஓட்டுநர் கதிர்வேல் பேருந்தை ஓட்டி வர, சு.கீணனுாரை சேர்ந்த மணிகண்ணன்(29) என்பவர் நடத்துநர் பணியில் இருந்தார். அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். அதற்கு நடத்துநர் மணிவண்ணன், சில்லரை இல்லை என்றதுடன் இறங்கும் போது வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். பேருந்து விருத்தாசலம் வந்த நிலையில் அந்தப் பெண் நடத்துநர் மணிகண்டனிடம் சில்லறையை கேட்டுள்ளார். அதற்கு மணிகண்டன் தாறுமாறாக பேசியதால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. மேலும் மணிகண்டன் அந்த பெண்ணை ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசியதாக கூறப்படுகிறது. 

 

இதனால் மனமுடைந்த அந்த பெண், விருத்தாச்சலம் பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பிறகு பேருந்தில் நடத்துநர் நடந்து கொண்ட முறை குறித்து தனது உறவினர்களிடம் கூறி, கதறி அழுதுள்ளார். இதன்காரணமாக மாலை 5:30 மணியளவில் பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் சிலர் நடத்துநர் மணிகண்டனை ஆபாசமாக திட்டி, தாக்கி அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். 

 

இதையறிந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள்  விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலையின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட நடத்துநர் மணிகண்டன் விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, சிறிது நேரத்தில் நடத்துநர் மணிகண்டன் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கி நின்றது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் போக்குவரத்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார், போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசாரிடமும் போக்குவரத்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 மணிநேரம் தொடர்ந்த போராட்டத்தின் இடையே இரவு 8:00 மணியளவில் அப்பகுதியில் திடீர் கனமழை பெய்தது.


இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் அருகே இருந்த கடைகளில் ஒதுங்கி நின்றனர். நீண்ட நேரம் மழை பெய்ததால் இதனை பயன்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்ற பொதுமக்களும், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகினர். 


இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், நடத்துனரை தாக்கிய சம்பவத்தால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் மீண்டும் விருத்தாச்சலம் பணிமனை 1, 2க்கு கொண்டு சென்று பேருந்துகளை நிறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளும், காவல் துறையினரும் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.