Skip to main content

மகப்பேறு விடுப்பிலுள்ள பெண் ஊழியர்கள் இடமாற்றம்! - தொழிலாளர் நலத்துறையில் விதிமீறல்!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

Transfer of female employees on maternity leave! - Violation for manual in labor welfare!
                                                தமிழ்ச்செல்வி

 

“விருதுநகர் தொழிலாளர் நல உதவி ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஸ்டெனோ டைப்பிஸ்ட் பிரேமாவதி,  மகப்பேறு விடுப்பில் சென்ற 25 நாட்களில், அப்பணியிடத்துக்கு கீதாலட்சுமி என்பவருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு, அவர் பணியேற்றுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலும், தொழிலாளர் நலத்துறையில் பணிபுரிந்த டைப்பிஸ்ட் செல்லதுரைச்சி மகப்பேறு விடுப்பில் இருந்தபோது, அப்பணியிடத்திற்கு மற்றொரு ஊழியருக்குப் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தொழிலாளர் ஆணையரின் இச்செயல், தமிழக அரசின் உத்தரவை மீறிய செயலாகும். 

 

தொழிலாளர் நலத்துறையில், மகப்பேறு விடுப்பில் சென்ற அனைத்துப் பெண் ஊழியர்களும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கையால், தொழிலாளர் நலத்துறையின் பெண் ஊழியர்கள் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பில் செல்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மகளிர் நலனுக்கு எதிரான இப்போக்கு தொடருமானால், பிற துறைகளிலும் இந்த ஆபத்து ஏற்படும். தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராகச் செயல்படும் கூடுதல் தொழிலாளர் நல ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என விருதுநகர் மாவட்ட தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் நம்மிடம் குமுறலை வெளிப்படுத்தியதோடு, முதல்வர் வரைக்கும் புகார் அனுப்பியுள்ளனர். 

 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வியிடம் பேசினோம், “அரசுத்துறையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு கால 9 மாத விடுப்பினை சங்கங்கள் போராடி பெற்றுத் தந்துள்ளன. இந்த 9 மாதங்களும், தாயும் குழந்தையும் பாசப்பிணைப்போடு இருக்க வேண்டும்; தாய்ப்பால் அந்தக் குழந்தைக்கு கிடைக்கவேண்டும் என்ற செயல்முறைக்காகவே, இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையானது, மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாகவே நமக்குக் கிடைக்கிறது. 

 

ஆனால்.. இந்த தொழிலாளர் நலத்துறையில், மகப்பேறு விடுப்பு யாரெல்லாம் எடுக்கிறாங்களோ, அவங்கள எல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாலயே, தொலைதூர மாவட்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிடறாங்க. கையூட்டு வாங்கிக்கிட்டு, அந்த இடத்த யார் கேட்டாலும், அவங்களுக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் கொடுத்துடறாங்க. எப்படித் தெரியுமா? விருதுநகர் மாவட்டம்னா திருச்சில தூக்கி போட்ருவாக்க. அந்த மூலைல இருந்து இந்த மூலைக்குன்னு மாத்தி மாத்தி போட்றது தொழிலாளர் நலத்துறையில நடந்துக்கிட்டிருக்கு. இதுல கொடுமை என்னன்னா.. மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் ஊழியர்களுக்கு, அதற்கான ஊதியம் வழங்குவதில்லை. இப்படி நடந்தால், அந்தப் பெண் ஊழியர் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்? குழந்தையை எப்படிப் பராமரிக்க முடியும்? கைக்குழந்தையை வச்சிக்கிட்டு கண்ணீரும் கம்பலையுமா யார்கிட்ட சொல்லுறதுன்னே தெரியாம, மகப்பேறு விடுப்பிலுள்ள பெண் ஊழியர்கள் பரிதவிக்கிறாங்க.  

 

தொழிலாளர் நலத்துறை ஆணையர் ரவிசங்கரை நாங்க போயி பார்த்தோம். பொதுவா மகப்பேறு விடுப்பு எடுக்கும் பெண் ஊழியரோட பணியிடம் அப்படியே நிலுவையா இருக்கிறதுனால, இன்னொரு பெண் ஊழியருக்கு அங்கே டிரான்ஸ்ஃபர் போடறோம்னு சொல்லி தப்பிக்கப் பார்த்தாரு. ஒரு பெண் ஊழியர் மகப்பேறு விடுப்புல போனாங்கன்னா, அவங்களோட பணிகள் அப்படியே கிடப்புல கிடந்திருதுன்னு காரணம் சொன்னாரு. அவரிடம் நாங்க, இது எல்லா அரசுத்துறையிலும் நடக்குறதுதான. பெண் ஊழியர்கள் தொழிலாளர் நலத்துறையில் மட்டுமா வேலை பார்க்கிறாங்க? இது, தமிழ்நாட்டுல அரசுத்துறையில் வேலை பார்க்கும் எல்லா பெண் ஊழியர்கள் சம்பந்தப்பட்டது. ஒரு அரசு ஆணையை மீறி செயல்படறீங்க. இது சட்டத்துக்குப் புறம்பானது. ஏற்றுக்கொள்ளவும் முடியாதுன்னோம். 

 

நிறைய அரசு அலுவலகங்களில் கழிப்பறை இல்லாம, உணவு சாப்பிடறதுக்கு இடமில்லாம, அவங்கவங்க இடத்துல வச்சி சாப்பிட்டு பெண் ஊழியர்கள் அவஸ்தைப்படறாங்க. இதையெல்லாம், அரசுத்துறை அதிகாரிகள் சரிபண்ண மாட்டாங்க.  அரசியல், பணபலத்தைப் பயன்படுத்தி பெரிய போஸ்ட்டுக்கு வந்துடறாங்க. அரசாங்கம் ஒரு ஆர்டர் போடுமாம். அதிகாரிகள் அதை மீறுவார்களாம். கேலிக்கூத்தால்ல இருக்கு?” என்று ஆதங்கப்பட்டார். விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மின்னல்கொடியைத் தொடர்புகொண்டோம்.  

 

“பிரேமாவதிக்கு பேறுகால விடுப்பு ஊதியம் கிடைக்கும்படி செய்துவிட்டோம். மற்றபடி, பெண் ஊழியர்கள் இடமாற்ற நடவடிக்கை என்பதெல்லாம், மேலதிகாரிகள் சம்பந்தப்பட்டது” என்று முடித்துக்கொண்டார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் ஊழியர் மாறுதலை எதிர்த்து, 23-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.