Skip to main content

கரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு சம்பளம் தராததால் ஊழியர்கள் முற்றுகை

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

tondiarpeat corona employees

 

 

கரோனா நோய் தொற்றால் சென்னை நகரில் பொதுமக்கள் தொடர்ந்து கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் மாநகராட்சி ஒவ்வொரு வார்டுக்கும் தற்காலிக பணியாளர்களை நியமித்து வீடு வீடாகச் சென்று, வீட்டில் உள்ள நபர்களை கண்காணித்து அவர்களுக்கு தினமும் டெம்பரேச்சர் பார்த்து, அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா அவ்வாறு இருந்தால் அவர்களை அருகில் உள்ள மாநகராட்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

கரோனா தடுப்பு முன் களப்பணியாளர்கள் என்றழைக்கப்படும் அவர்களுக்கு தினந்தோறும் 500 ரூபாய் சம்பளம் என்ற அளவில் மாநகராட்சியால் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுபோன்று தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வரும் தற்காலிக ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் சம்பளம் முறையாக வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

 

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகிறார்கள். மேலும் இது போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ள தற்காலிக ஊழியர்கள் சுமார் 500 பேரை நாளை முதல் பணிக்கு வரவேண்டாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளதாகவும் அவர்கள் இதுவரை வீடு வீடாக சென்று டெம்பரேச்சர் பார்க்க பயன்படுத்திவந்த கருவிகளையும் ஒப்படைக்கும்படி மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த முன் களப்பணியாளர்கள் இன்று சென்னை தண்டையார்பேட்டை மண்டல மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். தங்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டரை மாத சம்பளத்தை தர வேண்டும் என்றும், மேலும் தங்களுக்கு மாநகராட்சி தொடர்ந்து பணி வழங்க வேண்டுமென்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டனர். பின் மாநகராட்சி மண்டல அலுவலரைச் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவினையும் வழங்கினர். 

 

இதுகுறித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த முன் களப்பணியாளர்கள் கூறும்போது, “மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த நாங்கள் மாநகராட்சி கேட்டுக் கொண்டதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதில் நாங்கள் பலர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்து மீண்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

 

ஆனால், எங்களுக்கு இதுவரை இரண்டரை மாத சம்பளம் தராமல் இருந்து வருகிறார்கள். மேலும் இன்று திடீரென எங்களிடம் உள்ள டெம்பரேச்சர் கருவி பல்ஸ் பார்க்கும் மிஷின் ஆகியவற்றை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் நாளை முதல் உங்களுக்கு வேலை இல்லை என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்நிலையில் எங்களை திடீரென வேலையில் இருந்து நீக்கியது எந்த விதத்தில் நியாயம். எனவே எங்களுக்கு நின்றுபோன சம்பளத்தை உடனே வழங்கவேண்டும்” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Minister MK Stalin propaganda In Chennai

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவின்போது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

இதனையொட்டி அரசியல் கட்சிகளின், தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து பெசன்ட் நகரில் இன்று (17.04.2024) மாலை 4 மணிக்கு தமிழ்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.