Skip to main content

குரூப்- 1 தேர்வு முறைகேடு! சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 
 

திமுக தரப்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தாக்கல் செய்த பொது நல மனுவில், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2015 ஜூன் மாதம் துணை ஆட்சியர், டி.எஸ்.பி உள்ளிட்ட பதவிகளுக்கான அறிவிப்பாணை வெளியிட்டது. இதன்படி  2015 நவம்பர் 8- ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெற்று, முதல் நிலை தேர்வு முடிவுகள் 2016- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டதையும், அதில் 74 பேர் தேர்வு செய்யப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். 

TNPSC EXAM GROUP 1 CBI INVESTIGATION NEED TO DMK PARTY HIGH COURT

மேலும், தேர்வு பெற்றவர்களில் மனித நேய பயிற்சி மையம் மற்றும் அப்பல்லோ பயிற்சி மையம் ஆகியவற்றிலிருந்து மட்டுமே 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இந்த குறிப்பிட்ட இரண்டு பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே அதிக அளவில் தேர்ச்சி அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது என்பதற்கான சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். 
 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே செய்திகள் வெளியானதாகவும், குரூப் 1 தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் வெளியாகி உள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்த ஸ்வப்னா என்ற திருநங்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

மனிதநேய பயிற்சி மையம் மற்றும் அப்போலோ பயிற்சி மையங்களில் படித்தவர்கள் மட்டுமே அதிகளவில் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், இது தொடர்பாக அப்போலோ பயிற்சி மையம் நிறுவனத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

இந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை அதிகாரி தொடர்ந்து பணியிட மாறுதல் செய்யபட்டு வருவதாகவும், இந்த முறைகேட்டில் ஈடுபட சம்மந்தப்பட்ட பயிற்சி மையங்களிலிருந்து டி.என்.பி.எஸ்.சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி, செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், அமைச்சர் ஆகியோரும் மாணவரிடமிருந்து 15 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் திமுக தரப்பு மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 

மனிதநேய பயிற்சி மையம் மற்றும் அப்போலோ பயிற்சி மையங்கள் அதிகளவில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவருவதால், அரசியல் செல்வாக்கு மிக்க முன்னாள் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்திற்கு எதிராக உரிய விசாரணை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்பதாலும், தற்போது நடைபெற்று வரும் சிபிசிஐடி காவல்துறை விசாரணை டிஜிபி கட்டுப்பாட்டிலும், மத்திய குற்றப்பிரிவின் விசாரணை சென்னை மாநகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டிலும் இருப்பதால், உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விசாரணை உரிய முறையில் நடைபெற வாய்ப்பு இல்லாமல் போவதற்கான சூழ்நிலை இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
 

எனவே இந்த வழக்கை சிபிஐயின் இணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமென பிப்ரவரி 12- ஆம் தேதி தமிழக அரசுக்கு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்ததாகவும், ஆனால் இதுவரை அந்த கோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் குரூப்-1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.