Skip to main content

மத்திய அமைச்சருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
TN CM MK Stalin letter To the Union Minister

புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் இன்று (11.07.2024) சிறை பிடித்துச் சென்றனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பயும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது மீனவர்கள் 13 பேருக்கும் ஜூலை 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11-7-2024) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மீனவர்கள், IND-TN-08-MM-364, IND-TN-16-MM-2043 மற்றும் IND-TN-08-MM-1478 ஆகிய பதிவெண்கள் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அப்போது இலங்கைக் கடற்படையினரால் இன்று (11-7-2024) கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நம் நாட்டு மீனவர்கள். வரலாறு காணாத நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். தற்போது 173 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மீனவர்கள் இதுபோன்று சிறை பிடிக்கப்படுவது மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதோடு, அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டும். இதுதொடர்பாக உரிய தூதரக நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்