Skip to main content

கரோனா ஊரடங்கு விதியை மீறிய அமைச்சரும், அதிமுகவினரும்... வழக்கு பதிய பயப்படும் காவல்துறை...

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

 

ஊரடங்கு காலத்தில் அரசின் விதிகளை கடைபிடிக்க வேண்டிய அமைச்சரே, விதிகளை மீறி கட்சியினருடன் சேர்ந்து மாபெரும் ஊர்வலம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுகவில் திருவண்ணாமலை தெற்கு மா.செவாக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச பிரச்சனையால் அரசு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் கைதாகி சிறை சென்றது உட்பட பல சர்ச்சைகளில் சிக்கி கட்சியில் ஓரம் கட்டி வைக்கப்பட்டுயிருந்தவருக்கு ஜெ. மறைவுக்கு பிறகு அடுத்தடுத்து கட்சியில் பதவிகள் வாங்கி வந்தார். ஆனாலும் அவரின் கனவான மா.செ பதவியில்தான் மீண்டும் அமரவேண்டும் என நினைத்தார். இரண்டு வாரத்துக்கு முன்பு மா.செ.வாக அக்ரி நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை பெரிய அளவில் கொண்டாடவேண்டும் என முடிவு செய்தார் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி.

 

அதன்படி ஆகஸ்ட் 8ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், கழக அமைப்பு செயலாளராக புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள சேவூர்.ராமச்சந்திரன் திருவண்ணாமலை நகருக்கு வருவதாக அறிவித்திருந்தார். அவரோடு சேர்ந்து திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாடுகளை மா.செ அக்ரி.கிருஷ்ணமூர்த்தி செய்தார்.

 

இதற்காக திருவண்ணாமலை, கலசப்பாக்கம், தண்டராம்பட்டு, செங்கம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் உள்ள தனது ஆதரவாளர்களை திரட்டினார்.  இருநூறுக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள், 50க்கும் அதிகமான கார்களில் அக்ரியும் அவரது ஆதரவாளர்களும், அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலை நகரில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்தனர். இதற்காக அதிமுகவினர் நடத்திய ஊர்வலம் திருவண்ணாமலை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, 500க்கும் அதிகமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களில் கட்சி கொடி கட்டிக்கொண்டு, நகரத்தில் ஊர்வலம் வந்தது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கரோனா கால ஊரடங்கு விதிகளை கடைபிடிக்க வேண்டிய அமைச்சரே, அரசாங்கத்தின் விதிகளை மீறி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்தது. சுமார் 3 மணி நேரம் திருவண்ணாமலை நகரத்தை வலம் வந்து தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தியதை காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது.

 

தற்போது இதுதொடர்பாக திமுக உட்பட எதிர்கட்சியினர் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். சமூக வளைதளங்களில் திமுகவினர், நலத்திட்ட உதவிகள் வழங்கிய நாங்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என எங்கள் மீது வழக்கு பதிவு செய்த போலிஸ், வெளிப்படையாக விதிகளை மீறி ஊர்வலம் நடத்திய அமைச்சர், அதிமுக மா.செ மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமான முதல் 5 மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று. அப்படிப்பட்ட மாவட்டத்தில் ஆளும்கட்சியான அதிமுக, இப்படி வெளிப்படையாக 500 பேர்களுக்கு மேலான கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை திரட்டி ஊர்வலம் நடத்தி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஆளும்கட்சி என்பதால் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளது. இவர்களால் எத்தனை பேருக்கு கரோனா பரவியிருக்குமோ என்கிற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. விதிகளை அப்பட்டமாக மீறி ஊர்வலம் நடத்திய அதிமுகவினர் மீதும், அதில் கலந்துக்கொண்ட அமைச்சர் மீதும், மா.செ. மீதும் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை காவல்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.