Skip to main content

கரோனா ஊரடங்கு விதியை மீறிய அமைச்சரும், அதிமுகவினரும்... வழக்கு பதிய பயப்படும் காவல்துறை...

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

 

ஊரடங்கு காலத்தில் அரசின் விதிகளை கடைபிடிக்க வேண்டிய அமைச்சரே, விதிகளை மீறி கட்சியினருடன் சேர்ந்து மாபெரும் ஊர்வலம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுகவில் திருவண்ணாமலை தெற்கு மா.செவாக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். லஞ்ச பிரச்சனையால் அரசு அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் கைதாகி சிறை சென்றது உட்பட பல சர்ச்சைகளில் சிக்கி கட்சியில் ஓரம் கட்டி வைக்கப்பட்டுயிருந்தவருக்கு ஜெ. மறைவுக்கு பிறகு அடுத்தடுத்து கட்சியில் பதவிகள் வாங்கி வந்தார். ஆனாலும் அவரின் கனவான மா.செ பதவியில்தான் மீண்டும் அமரவேண்டும் என நினைத்தார். இரண்டு வாரத்துக்கு முன்பு மா.செ.வாக அக்ரி நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை பெரிய அளவில் கொண்டாடவேண்டும் என முடிவு செய்தார் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி.

 

அதன்படி ஆகஸ்ட் 8ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், கழக அமைப்பு செயலாளராக புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள சேவூர்.ராமச்சந்திரன் திருவண்ணாமலை நகருக்கு வருவதாக அறிவித்திருந்தார். அவரோடு சேர்ந்து திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாடுகளை மா.செ அக்ரி.கிருஷ்ணமூர்த்தி செய்தார்.

 

இதற்காக திருவண்ணாமலை, கலசப்பாக்கம், தண்டராம்பட்டு, செங்கம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் உள்ள தனது ஆதரவாளர்களை திரட்டினார்.  இருநூறுக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள், 50க்கும் அதிகமான கார்களில் அக்ரியும் அவரது ஆதரவாளர்களும், அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனை அழைத்துக்கொண்டு திருவண்ணாமலை நகரில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்தனர். இதற்காக அதிமுகவினர் நடத்திய ஊர்வலம் திருவண்ணாமலை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, 500க்கும் அதிகமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களில் கட்சி கொடி கட்டிக்கொண்டு, நகரத்தில் ஊர்வலம் வந்தது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கரோனா கால ஊரடங்கு விதிகளை கடைபிடிக்க வேண்டிய அமைச்சரே, அரசாங்கத்தின் விதிகளை மீறி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்தது. சுமார் 3 மணி நேரம் திருவண்ணாமலை நகரத்தை வலம் வந்து தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தியதை காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது.

 

தற்போது இதுதொடர்பாக திமுக உட்பட எதிர்கட்சியினர் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். சமூக வளைதளங்களில் திமுகவினர், நலத்திட்ட உதவிகள் வழங்கிய நாங்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என எங்கள் மீது வழக்கு பதிவு செய்த போலிஸ், வெளிப்படையாக விதிகளை மீறி ஊர்வலம் நடத்திய அமைச்சர், அதிமுக மா.செ மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமான முதல் 5 மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று. அப்படிப்பட்ட மாவட்டத்தில் ஆளும்கட்சியான அதிமுக, இப்படி வெளிப்படையாக 500 பேர்களுக்கு மேலான கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை திரட்டி ஊர்வலம் நடத்தி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஆளும்கட்சி என்பதால் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளது. இவர்களால் எத்தனை பேருக்கு கரோனா பரவியிருக்குமோ என்கிற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. விதிகளை அப்பட்டமாக மீறி ஊர்வலம் நடத்திய அதிமுகவினர் மீதும், அதில் கலந்துக்கொண்ட அமைச்சர் மீதும், மா.செ. மீதும் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை காவல்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. கூட்டணி; தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
ADMK Alliance; Allotment of additional seats for DMDk

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADMK Alliance; Allotment of additional seats for DMDk

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. - பா.ம.க. - பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

திடீர் திருப்பம்; கூட்டணிக்கான ரூட்டை மாற்றிய பா.ம.க.?

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
sudden turn pmk has changed the route for the alliance

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் 10 மக்களவைத் தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு ஆரணி, சிதம்பரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளை பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளை வழங்க அ.தி.மு.க. மறுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்ததால் பா.ஜ.க.வுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் கூட்டணி குறித்து முடிவெடுக்க தைலாபுரத்தில் பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் அவசர கூட்டம் கடந்த 15 ஆம் தேதி (15.03.2024) நடைபெற இருந்த நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகக் கூறப்பட்டது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், தென் சென்னை, சிதம்பரம், தர்மபுரி மற்றும் சேலம் என முக்கிய தொகுதிகளுடன் ஏழு பிளஸ் ஒன் (மாநிலங்களவை பதவி) என முடிவாக உள்ளதாகச் சொல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பா.ம.க. விரும்பும் 7 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு ராஜ்ய சபா பதவியையும் ஒதுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் இல்லத்தில் பா.ம.க. எம்.எல்..ஏ அருள் இ.பி.எஸ்சை திடீரென்று நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது எனத் தகவல் வெளியாகி இருந்தது. முன்னதாக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியை பாமக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

sudden turn pmk has changed the route for the alliance

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்படுகிறது.