Skip to main content

தமிழகத்தில் முதன்முதலாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம், அபராதம் விதிப்பு...

Published on 13/02/2019 | Edited on 14/02/2019

 

teacher


 


நெல்லை மாவட்டத்தின் பங்களா சுரண்டை நகரிலுள்ள பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டவர் ஆசிரியை வசந்தி ஹாசிராணி. இவரது பதவி உயர்வு பள்ளி நிர்வாகத்தால் 02.06.2018ல் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் முறைப்படி தென்காசி கல்வி மாவட்டக் கல்வி அலுவலரான ஷாஜகான் கபீரின் ஒப்புதலுக்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால் மாவட்டக் கல்வி அலுவலகம் அவரது பதவி உயர்வை அங்கீகரிக்கவில்லை மேலும் இழுத்தடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியை வசந்தி ஹாசிராணி தனது பதவி உயர்வுக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
 

இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் சுப்பிரமணியன், திட்டமிட்டே தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் இந்த அங்கீகாரத்தை வழங்காமல் இழுத்தடித்திருக்கிறார். ஆகவே அவருக்குப் பத்தாயிரம் ரூபாய் ஆபராதம் விதிக்கப்படுகிறது. அதனை தலைமை நீதிபதி நிவாரண கணக்கில் பத்து நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மேலும் இந்த விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலரின், பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அது மட்டுமல்ல இவரைப் போன்ற கல்வி அதிகாரிகளால்தான், தமிழகத்தின் கல்வித்தரம் அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. இரண்டாவது இடத்தில் இருந்து 18 வது இடத்திற்குத்தள்ளப்பட்டுவிட்டது. என்று வேதனையோடு சுட்டிக்காட்டி இருக்கிறார் நீதியரசர்.
 

இத குறித்து நாம் மாவட்டக் கல்வி அலுவலர் ஷாஜகான் கபீரைத் தொடர்பு கொண்டபோது,

அவர் சரியான முறையில் அணுகவில்லை. எங்களிடம் தெரிவிக்காமலே நீதிமன்றம் சென்றுவிட்டார். எங்களிடம் சொல்லியிருந்தால் முடித்திருப்போம். அவருக்கான ஆர்டர் போடும் நிலையில் தானிருந்தோம் அங்கீகரித்து விட்டோம். அதற்குள்ளாக நீதிமன்றம் சென்று விட்டார். நீதிமன்ற உத்தரவை நாங்கள் மறுதினமே ரிவோக் செய்து விட்டோம் என்கிறார்.
 

தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்கள், குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது பதவி உயர்வு, ஊதிய உயர்வு பி.எப். கடன் உள்ளிட்ட பல்வேறு நிவாரணம் பொருட்டு மாவட்டக் கல்வி அலுவலகம் வந்துதான் ஆகவேண்டும். ஆனாலும், அவர்களின் கோரிக்கைகள் காரணமில்லாமல் இழுத்தடிக்கப்படுகின்றன என்று சொல்லும் ஆசிரியர்கள், தமிழகத்தில் இதுவரை எந்தக் கல்வி அதிகாரியும் இப்படி ஒரு கண்டனத்தைப் பெற்றதில்லை. என்கிறார்கள்.
 

கல்வித்துறையில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது இத் தீர்ப்பு.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு; உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Case against Nayanar Nagendran; Trial in the High Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். அதில் 7 நாள்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து மூலம் நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் சம்மன் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது. முதல் தகவல் அறிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கைப்பற்றப்பட்ட பணம் தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் இருந்து போட்டியிட தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்த முறையீட்டை தலைமை நீதிபதி அமர்வு நாளை (18.04.2024) விசாரிக்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.