Skip to main content

"ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

farmers electricity april 1fst cm edappadi palaniswami announced

 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரிநீரை 100 வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும் மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை திப்பம்பட்டியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூபாய் 565 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட, இந்தத் திட்டத்தின் மூலம் மேட்டூர் அணையின் உபரிநீர் மேட்டூர், ஓமலூர், சங்ககிரி மற்றும் எடப்பாடி தொகுதியிலுள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு அனுப்பப்படும். இதனால் 4,238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் ரூபாய் 5.36 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

 

விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்திற்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு நன்றி. மிகப்பெரிய திட்டத்தை வேகமாக செயல்படுத்தி நிறைவேற்றிய நிறுவனத்திற்கும் நன்றி. விவசாயிகளின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு என்றும் செயல்படும். ஐந்து ஆண்டுகளில் இரண்டுமுறை விவசாயிகளின் கடனை ரத்து செய்து சாதனை படைத்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. விவசாயிகள் பாதிக்கப்படும் போதெல்லாம் அவர்களைக் கைதூக்கி ஏற்றிவிடும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். குறுகிய காலத்தில் விவசாயிகளுக்காக மேட்டூர் - சரபங்கா உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது" என்றார். 

 

அதைத் தொடர்ந்து, முதல் ஏரியான எம்.காளிப்பட்டி ஏரிக்கு வந்த மேட்டூர் அணை நீரை மலர்தூவி முதல்வர் வரவேற்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.