கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டணம் அருகே உள்ளது ஜான்சன் பேட்டை. இப்பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவருக்கு மணிகண்டன்(27) என்கிற ஒரு மகனும், 20 வயதில் லாவண்யா மற்றும் 18 வயதில் இந்துமதி என இரண்டு மகள்களும் உள்ளனர்.
மணிகண்டன் தந்தைக்கு உதவியாக இரும்பு கடையில் அவரது வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். லாவண்யா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். இந்துமதி அருகில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் லாவண்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்த தேதி தீர்மானம் செய்யப்பட்ட நிலையில் பல் மருத்துவரை சந்திப்பதற்காக நேற்று மாலை மணிகண்டன், லாவண்யா, இந்துமதி ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் தர்மபுரிக்குச் சென்றுள்ளனர்.
தர்மபுரி காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பெரியாம்பட்டி மேம்பாலம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தின் அருகே ஒரு லாரி பழுதாகி நின்றிருந்தது. அந்த லாரியை கடந்து செல்ல முயன்றபோது பின்னால் அதிவேகமாக வந்து மற்றொரு லாரி அவர்கள் மீது மோதியது.இதனால் தூக்கி வீசப்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூவரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.