Skip to main content

சென்னை டூ விருத்தாசலம்; சிறுமி உட்பட மூன்று பெண்கள் மர்ம மரணம்!

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

Three chennai women passed away near virudhachalam
மிஸ்பசாந்தி

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் இன்று காலை தனது வயலுக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரது வயல் கிணற்றில் மூன்று சடலங்கள் மிதந்ததைக் கண்டு உடனடியாக சிறுபாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதையடுத்து அங்கு விரைந்து சென்ற சிறுபாக்கம் காவல்துறையினர் தீயணைப்பு துறையினரை வரவழைத்து 3 சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி உட்பட மூன்று பெண்கள் சடலமாக கிணற்றில் மிதந்தது குறித்து அப்பகுதியில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

 

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சிவகுருநாதன் (39) என்பவருக்கு ஏற்கனவே சுமதி என்ற பெண்ணோடு காதல் திருமணமாகி இவர்களுக்கு 17, 8 ஆகிய வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மங்களூரில் வேலை பார்த்து வந்த சிவகுருநாதன் 2004-இல் சென்னையில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு மிஸ்பசாந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சிவகுருநாதனின் தவறான நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்சினையில் சுமதி 2016-இல் தூக்கு போட்டு இறந்து விட்டார். அதன் பிறகு 2019-இல் ஊருக்கு வந்த சிவகுருநாதன் தனது பிள்ளைகள் மற்றும் அம்மாவுடன் வசித்து கொண்டு மங்களூரில் உள்ள பர்னிச்சர் கடையில் 2020-இல் இருந்து வேலை செய்து வருகிறார். 

 

Three chennai women passed away near virudhachalam
சிவகுருநாதன்

 

2004-இல் சென்னையில் வேலை பார்க்கும் போது மிஸ்பசாந்தி என்பவரது வீட்டில் தங்கி இருந்தபோது திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். அதன் மூலம் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனாலும் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. சிவகுருநாதன் குடிப்பழக்கம் உடையவர் என்பதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019-இல் சிவகுருநாதன் சொந்த ஊரான மலையனூருக்கு வந்து விட்டார். மிஸ்பசாந்தி தனது மகளோடு சென்னையிலிருந்து அவ்வப்போது மலையனூர் வந்து சிவகுருநாதனை பார்த்து விட்டு சென்றுள்ளார்கள். கடந்த மூன்று வருடங்களாக இருவருக்குள் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார்கள். கடந்த 27.11.22 அன்று மிஸ்பசாந்தி (35) அவரது மகள் அருள் ஹெலன் கிரேஸ் (வயது 8), அவரது அம்மா தேபோரால் கல்யாணி (60) மூவரும் மலையனூர் சிவகுருநாதன் வீட்டிற்கு வந்து இங்கேயே இருக்கப் போவதாகவும், தனியாக வீடு பார்க்கவும் சொல்லி உள்ளார்கள். அவரும் மலையனூரில் தனியாக வீடு பார்த்து கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளார்கள். நேற்று (30.11.22) இரவு 11.00 மணியளவில் சிவகுருநாதன் அவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதற்காக பார்க்கச் சென்றுள்ளார். அவர்கள் வீட்டில் இல்லை. அவர்களை தேடிப் பார்த்ததாகவும், ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை என்றும், அவர்களிடம் தொடர்பு கொள்ள செல்போன் எதுவும் இல்லை என்றும் கூறுகிறார். இதனிடையே இன்று (01.12.22) காலை 07.00 மணியளவில் வேல்முருகன் என்பவரது கிணற்றில் மூவரும் இறந்த நிலையில் மிதந்துள்ளார்கள் என்று அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து தகவல் சொன்னதின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வருகின்றனர் என்றனர்.

 

8 வயது சிறுமி உட்பட 3 பெண்கள் கிணற்றில் சடலமாக மிதந்தது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.