தேசத்தையே உலுக்கிய, சாத்தான்குளம் காவல் நிலைய கஸ்டடியில் நடந்தேறிய தந்தை- மகன் இரட்டைப் படுகொலையில் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை, ஐ.ஜி. சங்கர் தலைமையில் வேகமெடுத்திருக்கிறது. கடந்த ஒருவாரமாக தூத்துக்குடி மாவட்டத்திலேயே மையம் கொண்ட ஐ.ஜி தன் பணிகளை விரைவுபடுத்தியுள்ளார்.
தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் காவலர்களால் கடுமையாகச் சித்ரவதைச் செய்யப்பட்டது முதல் கோவில்பட்டி சப் ஜெயிலில் மரணமடைந்தது வரை, வழியோரம் நடந்தவைகளை சாட்சிகள், மற்றும் சம்பந்தப்பட்ட காவலர்களின் வாயிலாகவும் சி.பி.சி.ஐ.டி. டீம் திரட்டியிருக்கிறது.
அதனடிப்படையில் ஆரம்பத்தில் 302 பிரிவான கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் காவலர்கள் குமார், முத்துராஜ் என 5 பேர் வளைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணையில் விட்டுப் பிடிக்கப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை, காவலர்கள் தாமஸ், சாமத்துரை, செல்லத்துரை, வெயிலுமுத்து உள்ளிட்ட 5 பேரை நேற்றிரவு (08/07/2020) கைது செய்த சி.பி.சி.ஐ.டி அவர்களை ரிமாண்ட் செய்து பேரூரணி சிறையிலடைத்தால் பிரச்சினை நிச்சயம். பழைய கைதிகளுக்கு ஏற்பட்ட கதி இவர்களுக்கு வரலாம் என்பதால், செல்லத்துரை, சாமத்துரை, வெயிலுமுத்து, மூவரையும் மதுரை சென்ட்ரல் ஜெயிலில் அடைத்தனர். எஸ்.ஐ. பால்துரை, தாமஸ் இருவருக்கும் உடல் நலன் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் ஜெயராஜும், மகன் பென்னிக்சும் போலீசாரால் தாக்கப்பட்ட நேரத்தில் கொடூரச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் எஸ்.ஐ.க்கள் போலீஸ் மற்றும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என மொத்தம் 14 பேர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர்களில் காவலர்கள் 10 பேரும் கைது வளையத்தில். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி.யினர். ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அனைவரையும் விசாரித்துள்ளனர்.
இதனிடையே சாத்தான்குளம் சம்பவம் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதால் ஆரம்பத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்தது. கொலைத் தடயங்களை அழித்தல் என இரண்டு வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ.யின் விசாரணை மீதமுள்ளவர்களின் மீதும் பாயலாம் என்பதே தற்போதைய க்ளைமேட்.