Skip to main content

ஜாமீனில் வந்தவர் கோரக் கொலை... போலீசார் தீவிர விசாரணை!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

thoothukudi district incident police investigation

 

தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் அருகிலுள்ள கீழப் பனைகுளத்தைச் சேர்ந்தவர் யோவான் அற்புதராஜ். இவர் கூலித் தொழிலாளி. எண்ணியதை சாதிப்பதற்காக எந்த எல்லை வரையிலும் போகக்கூடிய நபர் என்கிறார்கள் அவரைப் பற்றி அறிந்தவர்கள்.

 

யோவான் அற்புராஜ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11- ஆம் தேதி அன்று, அதே ஊரைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் ஜெயராஜின் மனைவி அஜிதாவிடம் தகாத முறையில் நடக்க முயன்றிருக்கிறார். அதனை அஜிதா தட்டிக்கேட்க முயன்றபோது அவரிடம் தகராறு செய்த அற்புதராஜ், அவரைத் திடீரென்று கழுத்தில் வெட்டியிருக்கிறார். அந்தத் தாக்குதலால் அஜிதாவின் கை ஒன்று செயலிழந்திருக்கிறது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து, யோவான் அற்புதராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அற்புதராஜ், தன் சொந்த ஊருக்கு வந்தார். ஊர் மக்கள் சிலரிடம் இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட அஜிதா, அவரது கணவர் ஜெயராஜ், மாமனார் செல்லத்துரை ஆகியோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியிருக்கிறார். இதனால் செல்லத்துரைக்கும், அற்புதராஜிற்கும் பகைமையானது. இதையடுத்து அந்த ஊரின் பெண்கள் சிலர், அற்புதராஜ் தங்களை மிரட்டுவதாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

thoothukudi district incident police investigation

 

இந்த நிலையில் நேற்றைய தினம் (25.02.2021) அங்குள்ள காட்டுப் பகுதியில் யோவான் அற்புதராஜ் நின்றிருக்கிறார். அது சமயம் அங்கு வந்த செல்லத்துரைக்கும், அவருக்கும் வழக்கு தொடர்பாக வாக்குவாதமாகி தகராறு வரை போயிருக்கிறது. இதனால் ஆத்திரமான செல்லத்துரை, தான் வைத்திருந்த அரிவாளால் யோவான் அற்புதராஜை மாறி மாறி வெட்ட, அதில் தலை மற்றும் கை துண்டானது. சம்பவ இடத்திலேயே பலியானார் அற்புதராஜ். பின்பு துண்டான கையை மட்டும் எடுத்துக்கொண்டு போய் அவரது வீட்டு முன் வீசிவிட்டுத் தலைமறைவாகியிருக்கிறார் செல்லத்துரை.

 

தகவலறிந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார், அற்புதராஜின் உடலையும் தனியாகக் கிடந்த கையையும் கைப்பற்றி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். ஸ்பாட்டிற்கு வந்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். தலைமறைவான செல்லத்துரையைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் உட்பட மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும், தேடலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.