Skip to main content

போராடிய விவசாயிகள்.. சமாதானம் பேச மரத்தில் ஏறிய சப்-இன்ஸ்பெக்டர்..  

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

thittakudi vellington water farmers demands


கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாயில் உள்ள வெலிங்டன் நீர் தேக்கத்திலிருந்து பாசணத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

இதுகுறித்து நேற்று (08/01/2021) அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 2020 - 2021ஆம் ஆண்டு பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிட விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 11.1.2021 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனிடையே ஒரு தரப்பு விவசாயிகளைக் கலந்தாலோசிக்காமலும், கோரிக்கைகளைப் பரிசீலிக்காமலும் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி விவசாயிகள் மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். 

 

வெலிங்டன் நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம், குறிப்பிட்ட சிலருக்கு அழைப்புவிடுத்து விருத்தாசலத்தில் நடந்தது. இதில் புறக்கணிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் தமிழக விவசாயிகள் கட்சித் தலைவர் தயா.பேரின்பம் தலைமையில்  விவசாயிகள், திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற திட்டக்குடி காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

 

thittakudi vellington water farmers demands


அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகள் மரத்தில் இருந்து இறங்கி வர மறுத்ததால், சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மரத்தில் ஏறி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதிலும் உடன்பாடு ஏற்படாததால் திட்டக்குடி வட்டாட்சியர் சையது அபுதாகீர் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டு விவசாயிகளை மரத்தில் இருந்து இறங்கி வரச் செய்தார். அதைத் தொடர்ந்து திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் திட்டக்குடி டி.எஸ்.பி மற்றும் விவசாயிகளுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.