![Thiruvarur district near Mannargudi Thiranagapuram incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/07PZEYb4KjUxxzH5zmYe3r5j63aScVS-aMn-kk2tDuE/1718533148/sites/default/files/inline-images/thiru-vedi-art.jpg)
நாட்டு வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருத்தநாகபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலை விஜய செல்வகுமார் என்பவருக்கு சொந்தமானதாகும். இத்தகைய சூழலில் தான் வழக்கம் போல் இங்கு நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென இந்த ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்து ஏற்பட்டபோது ஆலையில் மூன்று பேர் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் வெடி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது ஆலையில் பணியில் ஈடுபட்டு சதீஷ்குமார் என்பர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த வெடி விபத்தில் காயம் அடைந்த இரண்டு பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.