Skip to main content

“சாதி, மத பிரச்சனையை தடுக்க பிரிவு அமைக்க வேண்டும்” - திருமாவளவன் எம்.பி

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

thirumavalan talk about pudukkottai issue

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி முத்துக்காடு ஊராட்சியில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக போலீசாரின் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, “வேங்கை வயல் பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, அந்த அநாகரிகமான செயல் கண்டிக்கத்தக்கது. அத்துடன் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்திருக்கிறார். முதலில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த குழுவின் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளானது. அதனால் உடனடியாக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றியிருக்கிறார். சிபிசிஐடி விசாரணையில் உண்மை குற்றவாளி கண்டுபிடிக்கப்பாடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

 

இந்த மனித குல அவமானத்தை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம்.  இதுபோன்ற கொடுமைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தேவைப்படுகிறது. தீவிரவாதத்தை தடுக்க எப்படி உளவுப்பிரிவு இருக்கிறதோ, அதேபோல் சாதி, மத பிரச்சனைகளை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு தனி உளவுப்பிரிவு தேவைப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு சிந்திக்க விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். இரட்டைக் குவளை முறை அங்கொன்றும், இங்கொன்றுமாக நமக்கு வெளிச்சத்திற்கு வந்தாலும் தமிழகத்தில் பரவலாக இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது. ஆகவே அதனை முற்றாக ஒழிப்பதற்கு முதல்வர் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதற்கு முன் இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க உத்தரவு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.