Skip to main content

கண்மண் தெரியாமல் ஓடி கிணற்றில் விழுந்த திருடர்கள்; மீட்டு போலீசார் விசாரணை

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

Thieves who ran blindly and fell into a well; Rescue police investigation

 

கொள்ளையடித்து விட்டு கண்மண் தெரியாமல் ஓடிய கொள்ளையர்கள் கிணற்றில் விழுந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கோவை குஞ்சிபாளையத்தை சேர்ந்த விவசாயி பிரதீப் என்பவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அதிகாலை சுமார் மூன்று மணியளவில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்துக் கொண்டு இரண்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். பிரதீப்பின் மனைவி மகாலட்சுமி சத்தம் கேட்டு எழுந்தார். அப்பொழுது பதுங்கியிருந்த இருவரும் கத்தியைக் காட்டி மிரட்டி மகாலட்சுமி அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். உடனே வீட்டில் இருந்தவர்கள் 'திருடன்... திருடன்...' எனக் கூச்சலிட்டனர். அங்கிருந்து தப்பி ஓடிய அந்த இரண்டு நபர்களும் அங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காளிபாளையம் பகுதிக்குச் சென்றனர். அங்கு பால் கறப்பதற்காக நின்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்ட முயன்றனர்.

 

அந்த பெண்ணும் திருடன் என கூச்சலிட்டதால் அந்த இரு நபர்களும் ஓடினர். அந்தப் பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு திருடர்களைத் துரத்தினர். இதில் கண் மண் தெரியாமல் ஓடிய இருவரும் விவசாய நிலத்தில் இருந்த 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தனர். வெறும் மூன்றடிக்கு மட்டுமே கிணற்றில் தண்ணீர் இருந்தது. விவசாயக் கிணற்றின் பாம்பேறி பகுதியில் சிக்கிய ஒரு நபர், மற்றொருவரை தவிக்க விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டான். உடனடியாக அந்தப் பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கயிறு மூலம் கிணற்றில் விழுந்த திருடனை மீட்டனர்.

 

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் ரமேஷ் என்பதும் மற்றொருவர் ஹரீஷ் என்பதும், இவரும் தேனியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் தேனியில் இருந்து ரயில் மூலமாக பொள்ளாச்சிக்கு வந்து பின்னர் மது அருந்திவிட்டு திருட்டில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. தற்பொழுது காலில் அடிபட்ட ரமேஷ் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், ரமேஷ் வருவான் என பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் காத்திருந்த  ஹரீஷையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டு வேலைக்கு சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Youth misbehave with a 13-year-old girl while doing domestic work

அரியானா குர்காவன் பகுதியில் உள்ள வீட்டில் வேலை செய்வதற்காக 13 வயது சிறுமியை மாதம் 9 ஆயிரம் சம்பளத்திற்கு கடந்த ஜூன் மாதம் வேலைக்கு சேர்த்துள்ளனர். முதல் இரண்டு மாதத்திற்கு மட்டும் அந்த பெண்ணின் தாயாருக்கு சம்பளப் பணத்தை வீட்டின் உரிமையாளர் சசி என்ற பெண் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின் சம்பளப்பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர். அத்தோடு, சிறுமியை பார்க்க கூட அவரின் தாய்க்கு அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், சிறுமியை வேலைக்கு சேர்த்த நாள் முதல் அவருக்கு சரியான உணவு கொடுக்காமல் தொடர்ந்து கொடுமை படுத்தி வந்ததுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் சசி சிறுமியை தாக்கி, இரும்பு கம்பி உள்ளிட்டவைகளால் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அத்தோடு, அவரது இரு மகன்களும் சிறுமியின் ஆடைகளை களைத்து, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் சிறுமியை கட்டி வைத்து, கைகளில் ஆசிட்டை ஊற்றி நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். 

இந்த நிலையில் சிறுமியின் தாய், தனது உறவினருடன் நேராக அந்த வீட்டிற்கு வந்துபார்த்து சிறுமியை மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மகளுக்கு நடந்த கொடுமைகளை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சசி மற்றும் அவரது 2 மகன்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

கடலூரில் 7 மையங்களில் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Constable Second Level Written Exam in 7 centres in Cuddalore

இரண்டாம் நிலை காவலர் நேரடி தேர்வு 2023, (இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு துறை காவலர்) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 3359 பணியிடங்களை நிரப்பிட எழுத்து தேர்வு கடலூர் மாவட்டத்தில் 1.செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மஞ்சக்குப்பம் 2.செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மஞ்சகுப்பம், 3. கிருஷ்ணசாமி மெமோரியல் மேல்நிலைப்பள்ளி வில்வநகர், 4. பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவனாம்பட்டினம், 5. அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்பள்ளி திருப்பாதிரிப்புலியூர், 6. சி.கே மேல்நிலைப்பள்ளி ஜட்ஜ் பங்களா ரோடு, 7. செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி கம்பியம்பேட்டை ஆகிய 7 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது. 

செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் விழுப்புரம் சரக துணை தலைவர் ஜியாவுல் ஹக் பார்வையிட்டார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உடன் இருந்தார்.