Skip to main content

''ஒரு ரூமுக்குள் உன்னை உட்கார வைக்க பார்த்தார்கள் ஆனால்...''-கலைஞர் பேசியது பற்றி மனம் திறந்த மு.க.ஸ்டாலின்!

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

சிங்காரச் சென்னை 2.0 மற்றும் தூய்மை பணிகளுக்கான 36.52 கோடி ரூபாய் மதிப்பில் 1,684 பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் 15 காம்பாக்டர் இயந்திரங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை ரிப்பன் பில்டிங்கில் இன்று நடைபெற்றது. அதேபோல் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

 

அப்பொழுது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''இந்த ரிப்பன் கட்டிடத்திற்குள் நுழையும் போது என்னுடைய நிறைவு 1996 க்கு போய்விட்டது. 1996 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற தேர்தலில் மேயராக என்னைத்  தேர்ந்தெடுத்து பணியாற்றுவதற்குச் சென்னை மாநகர மக்கள் எனக்கு உத்தரவிட்டார்கள். அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு பணியாற்றினேன். மேயர் என்றால் ஒரு பெரிய அங்கி, நூறு பவுன் செயின், செவர்லெட் கார் இதுதான் அவர்களின் பணியாக இருந்தது.  அந்த அங்கியைப் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்குப் போவது, விழாக்களுக்குப் போவது, வெளிமாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்வது, வெளிநாடுகளுக்குப் போவது. இதுதான் மேயரின் வேலையாக இருந்தது. அதை மாற்றி மக்கள் பணியாற்றுவதுதான் மேயருடைய வேலை என்பதை  மேயராக பொறுப்பேற்ற நான் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் என்னுடைய கடமையைச் செய்தேன்.

 

இந்த சாலை வழியாகப் போகும்போதெல்லாம் ரிப்பன் பில்டிங்கை பார்த்துவிட்டுத் தான் போவேன். இந்த ரிப்பன் பில்டிங்கை பார்க்கும் போதெல்லாம் நான் 96ல் மேயராக வெற்றி பெற்றது நினைவுக்கு வரும். அப்பொழுது பொறுப்பேற்பதற்காக இதே ரிப்பன் பில்டிங்கில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அதற்கு அழைப்பிதழ்கள் தயாராகி, அதைக் கலைஞரிடம் கொண்டுபோய் கொடுத்தோம். கலைஞர் அந்த அழைப்பிதழை உத்து உத்து பார்த்துக் கொண்டிருந்தார். முதல் பக்கத்தில் கலைஞர் எனக்குப் பொன்னாடை  அணிவிப்பதைப் போன்ற புகைப்படமும் கடைசி பக்கத்தில் ரிப்பன் பில்டிங்கின் புகைப்படமும் இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் கலைஞர். 96ல்  வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பொழுது என்னை அமைச்சராக்க வேண்டும் என்று எல்லாரும் கலைஞரிடம் போய் சொன்னார்கள். ஆனால் கலைஞர் என்னை அமைச்சராக்கவில்லை. நானும் அந்த நேரத்தில் அதை விரும்பவில்லை. ஆனால் நம்முடைய தோழர்கள் போய் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் கலைஞர் முடியாது முடியாது எனத் தடுத்துவிட்டார், மறுத்துவிட்டார். ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் நடைபெற்ற மேயர் பொறுப்புக்கான தேர்தலில் நான் போட்டியிட்டு மக்களுடைய வாக்குகளை வாங்கி, மக்கள் வாக்கைப் பெற்ற முதல் மேயராக நான் அன்றைக்குப் பொறுப்பேற்றேன். அந்த பில்டிங்கை பார்த்து அப்போது கலைஞர் சொன்னார், எல்லாரும் சேர்ந்து சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு ரூமுக்குள் உன்னை உட்கார வைக்கப் பார்த்தார்கள். ஆனால் நான் உன்னை எவ்வளவு பெரிய பில்டிங்கில் உட்கார வைத்திருக்கிறேன் என்று கலைஞர் பெருமையாகச் சொன்னார்.

 

இது வரலாற்றுச் சிறப்புமிக்க ரிப்பன் மாளிகை கட்டிடம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சட்டமன்ற கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவடைகிறது. எப்பொழுதுமே சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் பொழுது எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள நான் ஒத்துக்கொள்வதில்லை. ஏனெனில் சட்டமன்ற பணிகளைத் தொடர வேண்டும் என்பதற்காக அமைச்சராக இருந்த போதிலும் சரி இப்போதும் சரி அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அமைச்சர் நேரு  சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் இந்த சமயத்திலேயே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். வரவேண்டியது கொடியசைத்து விட்டுப் போக வேண்டியது என்று சொல்லித் தான் அழைத்து வந்தார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்த பொழுது தான் தெரிகிறது இங்கு ஒரு நிகழ்ச்சியையே  ஏற்பாடு செய்து, மேடை போட்டு என்னைப் பேசவும் வைத்திருக்கிறார். எப்பொழுதுமே நேரு ரொம்ப ஸ்பீடா இருப்பார். அதனால்தான் நான் இருந்த நகராட்சி நிர்வாக பொறுப்பை அவரிடம் கொடுத்து இருக்கிறோம்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.