Skip to main content

''தீர்க்கமாக ஆராய்ந்து இந்த தீர்ப்பை கொடுத்துள்ளார்கள்'' - வழக்கறிஞர் ப.பா.மோகன் பேட்டி

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதி தலை வேறு உடல் வேறாக கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடலை நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளம் அருகே வீசி விட்டுச் சென்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருந்தது.  

 

அவர், தன்னுடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப்  பழகி வந்தார். இதைப் பிடிக்காத தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட கும்பல் கோகுல்ராஜை கடத்திச் சென்று சாதி ஆணவக்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

 

இந்த வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையின்போது ஒருவர் கொல்லப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து மற்ற 15 பேரை மட்டும் வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்து விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மதுரை எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றம், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி தீர்ப்பு அளித்தது. இவர்களில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முக்கியக் குற்றவாளியான யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை விதித்ததோடு, அவர் இறுதிமூச்சு உள்ளவரை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்று தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கோகுல்ராஜின் தாயார் சித்ரா, வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை வழங்கக்கோரி அவரும் மேல்முறையீடு செய்துள்ளார்.

 

இது ஒருபுறம் இருக்க, எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட காலகட்டத்தில் யுவராஜ் தரப்புக்கு எதிராக சாட்சி சொன்ன கோகுல்ராஜின் தோழி சுவாதி, வழக்கு விசாரணையின்போது பிறழ்சாட்சியாக மாறினார். இதனால் அவர் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளையே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

 

இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. தீர்ப்பில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 5 பேர் விடுதலையை எதிர்த்து கோகுல்ராஜ் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவும் காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யுவராஜ்க்கு வழங்கப்பட்ட ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டுமென்ற தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தீர்ப்பைத் தொடர்ந்து கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இந்த வழக்கில் அடிப்படையான ஒன்றே ஒன்று சாட்சிகள் பொய் சொன்னாலும் சாட்சியம் பொய் சொல்லாது என்பது தான். சிசிடிவி ஃபுட்டேஜ் என்பது விஞ்ஞானம் வளர்ந்திருக்கக் கூடிய காலத்தில் அதை சாட்சியமாக ஏற்றுக் கொண்டதால் அந்த சிசிடிவி ஃபுட்டேஜ் சான்றாக இவர்கள் சந்தித்ததை நிரூபித்திருக்கிறது. இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்படாத இன்வெஸ்டிகேஷனின் வரையறைக்குள்ளேயே வராத புதிய தலைமுறை தொலைக்காட்சி நிருபர் கார்த்திகைசெல்வன் தலைமறைவாக இருந்த யுவராஜ் உடன் எடுத்த பேட்டி. அவர் சரண்டர் ஆவதற்கு முன்பாக விஷ்ணுபிரியாவின் தற்கொலை சம்பந்தமாக ஒரு பேட்டி வைத்தார்கள். அந்த கலந்துரையாடலின் போது யுவராஜ் தானாக வந்து கலந்து கொள்கிறார். அப்பொழுது தொலைக்காட்சி நிருபர் கேட்ட கேள்வியின் போது யுவராஜ் மலைக்கு போனதையும், கோகுல்ராஜையும் சுவாதியையும் சந்தித்ததையும், அவர்களிடமிருந்து செல்போனை பிடுங்கியதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

 

இந்த வழக்கை பொறுத்தவரை இது ஒரு சிறப்புச் சட்டம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்முறை தொடர்பான சட்டம். இந்த வழக்கில் எட்டாவது பிரிவு மிகவும் முக்கியமானது. அதில் அரசு தரப்பில் மிக முக்கியமான மூன்று விஷயங்களை நிரூபித்தால் போதும். பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டவர் ஒரு பழங்குடியினராகவோ, தலித்தாகவோ இருந்தால் போதும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலித் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். கொலை செய்யப்பட்டிருக்கிற கோகுல்ராஜ் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். குற்றவாளிகள் அனைவருமே தலித் அல்லாதவர்கள் என நிரூபித்திருக்கிறோம். இந்தியாவில் பல தீர்ப்புகளை பார்த்திருக்கிறோம். எல்லா தீர்ப்புகளிலும் இல்லாத வகையில் எட்டாவது பிரிவை கோகுல்ராஜ் வழக்கில் மட்டும்தான் முதல் முறையாக பயன்படுத்தி மிகத் தீர்க்கமாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.