Skip to main content

முதல்வர் நிவாரண நிதி விவரங்களில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை... வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதாக அரசு தரப்பு விளக்கம்

Published on 26/06/2020 | Edited on 27/06/2020
 There is nothing to hide in the financial details of CM relief! Govt.

 

கரோனா பேரிடரையொட்டி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெற்ற நன்கொடை விவரங்களில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும், அரசு வெளிப்படைத்தன்மையுடன் விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதாகவும்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய, நிவாரண நிதியத்தை உருவாக்க மத்திய - மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம், அதிகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், கரோனா பரவலை தடுக்கவும், ஊரடங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாகவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க தொழிலதிபர்கள் மற்றும் தனிநபர்களுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில்,  முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை, மக்கள் வழங்கி வருகின்றனர்.

ஆனால்,  முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு, பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு, என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், முதல்வர் பொது நிவாரண நிதி இணையதளத்தில் மார்ச் மாதம் முதல்,  38 ஆயிரத்து 849 பரிவர்த்தனைகள் மூலம் 20.47 கோடி ரூபாய் பங்களிப்பு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், பத்திரிகைகளில் 306 கோடியே 42 லட்சம் ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 There is nothing to hide in the financial details of CM relief! Govt.


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க  உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், அரசின் நிதித்துறை துணை செயலாளரும்,  முதல்வரின் பொது நிவாரண நிதி பொருளாளருமான பரிமளாசெல்வி சார்பில்,  பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது..

அதில், கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி தமிழக முதல்வர் சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக,  தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, பொதுமக்கள், கார்பரேட் நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்,  பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்துள்ளனர். அதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக இணையதளத்தின் வாயிலாக பணம் செலுத்தியவர்கள் விபரம் அதில் இடம்பெறவுள்ளன.

அதே நேரத்தில், அரசின் சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு வரைவோலை, காசோலை மூலமாகவும், சிலர் இணைய வழி எனச் சொல்லப்படும் (Google pay) கூகுள் பே, (Amazon Pay) அமேசான் பே, (Phonepe) போன் பே (Paytm) பேடிஎம் (Mobikwik) மொபிக்விக் உள்ளிட்ட UPI பணப் பரிவர்த்தனை என,  பல்வேறு வகையில் நிதிகள் வருவதால் இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதில் சிரமம் உள்ளது.  எனினும்,  அனைத்தையும் தொகுத்து,  இணையதளத்தில் வெளிப்படைத் தன்மையுடன் முழு விவரங்களை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணையதளத்தை பராமரித்து வரும் தேசிய தகவல் மையத்துடன் அரசு இணைந்து,  அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்.

அதேபோல,  10 லட்ச ரூபாய்க்கு மேலாக நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல்,  முதல்வர் சார்பில் பத்திரிகை செய்தியாக வெளியிடப்பட்டு, தினசரி நாளிதழ் மற்றும் காட்சி ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன. அது குறித்த விவரங்களை,  எப்போது வேண்டுமானாலும் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி,  தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெறும் தொகையாவும், மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, அதனை பிரத்யேகமாக (PPE KIT) முழு கவச உடைகள், வென்டிலேட்டர், மருத்துவமனைகளுக்கான உபகரணங்கள், தனிமைப்படுத்தும் மையங்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல், பொது சுகாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகங்களில்,  குறைவான எண்ணிக்கையிலான பணியாளர்கள்  பணிக்கு வருவதாலேயே,  இதுகுறித்த முழுமையான விவரங்களை வெளியிட தாமதமாகிறதே தவிர, இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும், அரசு வெளிப்படைத்தன்மையுடன் விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.