Skip to main content

விபத்தில் காயமடைந்தவரை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை... தாயின் மடியிலேயே மகன் உயிர் போன பரிதாபம்!!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

 There is no ambulance to take the injured in the accident

 

 

தனியார் பால் ஏற்றிச்சென்ற வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற கொத்தனார் படுகாயமடைந்தார். ஆம்புலன்ஸ் கிடைக்காததால் விபத்து ஏற்படுத்திய வாகனத்திலேயே காயமடைந்தவரை சிகிச்சைக்கு ஏற்றிச்சென்றனர். மேல் சிகிச்சைக்கு செல்லும்போது தாயின் மடியிலேயே மகன் உயிர்பிரிந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு தொண்டைமான் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்பவரின் மகன் ராஜமான் (வயது 22). இவர் கொத்தனார் வேலை செய்துவருகிறார். புதன்கிழமை மதியம் கீரமங்கலம் வடக்கு பகுதியில் ஒரு வீட்டில் வேலை செய்த ராஜமான் கடைவீதிக்கு செல்ல ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றபோது நகரம் சன்னதி பிரிவு சாலையிலிருந்து பிரதான சாலையை கடக்க முயன்றபோது கீரமங்கலத்தில் இருந்து கைகாட்டி நோக்கிச்சென்ற தனியார் பால் வாகனம் எதிர்பாராதவிதமாக ராஜமான் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் ராஜமான் படுகாயமடைந்தார்.

 

விபத்தில் காயமடைந்த ராஜமானை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால் விபத்து ஏற்படுத்திய வாகனத்திலேயே அதன் ஓட்டுனர் மணிகண்டன், காயமடைந்து உயிருக்கு போராடிய ராஜமானை ஏற்றி கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு  அனுப்புவதற்கு மீண்டும் ஆம்புலன்ஸ் இல்லாமல், ஒரு தனியார் காரில் ஏற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

விபத்து குறித்த  தகவல் அறிந்து கதறிக்கொண்டு வந்த அவரது தாயார் மடியில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜமான் உயிரிழந்தார். தாய் மடியிலேயே மகன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள ஆத்தாளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (வயது 22) என்பவரை கைது செய்து விசாரனை செய்தனர்.

 

கீரமங்கலம் பகுதி மக்களின் சேவைக்காக நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் கடந்த சில மாதங்களாக கரோனா பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்பட்டால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தனியார் வாகனங்களை பொதுமக்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கரோனா பணிக்காக அனுப்பப்பட்டுள்ள ஆம்புலன்ஸுக்கு பதிலாக மாற்று ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

150 அடி தேர் கவிழ்ந்து விபத்து; வெளியான பரபரப்பு காட்சி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
150 feet chariot overturned accident; Exciting scene released

திருவிழாவில் பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட 150 அடி உயரம் கொண்ட தேர் சாய்ந்து விழும் பரபரப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 150 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து விழுந்தது. தேர் சாய்ந்து விழுவதை சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து ஓடியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஏராளமான பக்தர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.