Skip to main content

தங்க கட்டி இருக்கு! வந்தா எடுத்துக்கலாம்; கொள்ளைக் கும்பலை பிடித்த போலீஸ் 

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

There is a gold nugget! Come and take; The police caught the robbery gang

 

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜியாவுதீன். இவரது நண்பர் ஜெகதீஷ். ஜியாவுதீனுக்கு ஜெகதீஷ் மூலம், துவரங்குறிச்சியைச் சேர்ந்த அன்வர் பாஷா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அன்வர் பாஷா, தன்னிடம் வெளிநாட்டு தங்க கட்டிகள் உள்ளதாகவும், ரூ. 15 லட்சம் கொடுத்தால், அந்தத் தங்கக் கட்டிகளைக் கொடுப்பதாகவும் ஜியாவுதீனிடம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்ற ஜியாவுதீன், தனது மற்றொரு நண்பரான கார்த்தி என்பவருடன்  ரூ.14,50,000 எடுத்துக்கொண்டு, கடந்த 18 ம் தேதி மாலை அன்வர் பாஷாவை துவரங்குறிச்சி, மோர்னிமலை முருகன் கோவில் பின்புறம் சந்திக்க சென்றுள்ளார். 

 

இவர்கள் இருவரும், அங்கிருந்து அன்வர் பாஷாவிற்கு போன் செய்து தாங்கள் வந்திருப்பதைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அங்கு மற்றொரு காரில் அன்வர் பாஷா மற்றும் 7 நபர்கள் வந்துள்ளனர். பிறகு அந்த காரில் இருந்து, ஒரு நபரை அனுப்பி ஜியாவுதினிடம் பணம் இருப்பதை உறுதி செய்துள்ளனர். பிறகு உடனடியாக, காரில் காக்கி சீருடை அணிந்த ஒருவருடன் மற்ற 7 நபர்களும் சேர்ந்து வந்து, ஜியாவுதீன் மற்றும் அவரது நண்பர் இருந்த காரின் பின்புறம் ஏறி, கார்த்தி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர்கள் வைத்திருந்த ரூ.14,50,000 பறித்துச் சென்றுள்ளனர். 

 

இது சம்பந்தமாக துவரங்குறிச்சி போலீஸில் ஜியாவுதீன் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை பெற்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதேபோன்று கடந்த 28.01.2023-ம் தேதி திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலையத்திற்குட்பட்ட மஞ்சம்பட்டி சந்தானமாதா கோவில் அருகில் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி, ரூ.10,50,000 ஏமாற்றியதாக மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

There is a gold nugget! Come and take; The police caught the robbery gang

 

இதில், தொடர்புடையவர்களை பிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமாரின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று (21.09.2023) மதியம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொருவாய் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பாலத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த காரின் அருகில் சென்ற போது, காரில் இருந்த 4 நபர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர். அப்போது காவல்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்து பிடித்தனர். 

 

பிடிப்பட்ட அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதில், மஞ்சம்பட்டி பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் ரூ.10,50,000 ஏமாற்றி பணத்தை எடுத்து சென்றதாக ஒப்புக்கொண்டனர். அதன்பேரில் பிடிபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த ஒரு தங்ககட்டி (100 கிராம்), 10-போலி தங்கக்கட்டிகள், ரூ.2,70,000 பணம், 21 செல்போன்கள், போலி பத்திரங்கள், காசோலை புத்தகங்கள், 12-சிம் கார்டுகள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஜியாவுதீன் வழக்கு தொடர்பாக அந்தக் கும்பலிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளியை பிடித்த தனிப்படையினரின் சிறப்பான செயலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஐ.பி.எஸ். பாராட்டினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நம்பவைத்து மோசம் செய்த பொறியாளர்! இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
Engineer arrested by police who cheated girl

தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்தவர் வனிதா (26, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரி பெண். பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர் தீர்மானித்து இருந்தனர். இதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியியல் பட்டதாரி யோகேஷ் (28) என்பவர், தரகர்கள் மூலம் விவரங்களை அறிந்து, வனிதாவை பெண் கேட்டுச் சென்றார். 

கடந்த ஜூலை மாதம் யோகேஷ் பெண் பார்க்கச் சென்றபோது, தன்னுடன் தாயார் ஜீவா (52), சின்ன சேலத்தைச் சேர்ந்த அவருடைய மாமா தமிழரசன் (39), அக்கா ஜெயஸ்ரீ (34) ஆகியோரையும் அழைத்துச் சென்றிருந்தார். இருதரப்புக்கும் பிடித்துப்போன நிலையில், செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். பெண் பார்க்கும் படலத்தின்போதே வனிதாவுக்கும், யோகேஷூக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போனது. நிச்சயதார்த்த தேதியும் முடிவு செய்ததால், இருவரும் அப்போது முதல் சகஜமாக அலைபேசியில் பேசி வந்துள்ளனர். 

அலைபேசிவழி பேச்சு, சில நாள்களிலேயே நேரடி சந்திப்பு வரை சென்றது. பின்னர் இருவரும் வார இறுதி நாட்களில் ஒன்றாக பல இடங்களுக்கும் ஒரே வாகனத்தில் சென்று வரும் அளவுக்கு நெருங்கிப் பழகத் தொடங்கினர். இந்த நெருக்கம் அவர்களை திருமணத்திற்கு முன்பே தனிமையில் இருக்கும் அளவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. வார விடுமுறை நாட்களில் வெளியே செல்லும் இவர்கள் சொகுசு விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இது மட்டுமின்றி யோகேஷ், புதிய உடைகள், மோதிரம் வாங்க வேண்டும் எனக்கூறி வனிதாவிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். 

தன்னுடனான நெருக்கத்தை திடீரென்று யோகேஷ் குறைத்துக் கொண்டதால், இதுபற்றி விசாரித்தபோதுதான் வனிதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனிதா, யோகேஷின் வீட்டிற்கே சென்று சட்டையைப் பிடித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், வனிதாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். அவருடைய தாயார், மாமா, அக்கா ஆகியோர் வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்தால் தீர்த்துக்கட்டி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

யோகேஷ்தான் எதிர்காலத்தில் தனது கணவராக வரப்போகிறான் என்று எண்ணியிருந்த வனிதாவால், தான் ஏமாற்றப்பட்டதை தாங்க முடியாமல், அரூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் யோகேஷ், அவருடைய தாயார், அக்கா, மாமா ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர்கள் திடீரென்று தலைமறைவாகிவிட்டனர். 

இந்நிலையில் அரூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த யோகேஷை, காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மற்ற மூவரையும் தேடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் யோகேஷை அரூர் சிறையில் அடைத்தனர். 

Next Story

பெண்ணை ஏமாற்றிய மேனஜர்! கொல்கத்தாவில் வளைத்து பிடித்த தமிழ்நாடு போலீஸ்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
The manager who cheated on the woman! Tamil Nadu police arrested in Kolkata

வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் சுண்ணாம்புக்கல் சரக்குகளை இந்தியாவிற்குக் கொண்டு வர, 42 லட்சம் ரூபாய் சரக்கு புக்கிங் கட்டணம் வசூலித்துக்கொண்டு மோசடி செய்த இந்தோனேசிய நிறுவன ஊழியரை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய மனைவி பூவிழி (40). இவர், வெளிநாடுகளில் இருந்து சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம், துபாய், பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து சுண்ணாம்புக்கல் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்தார். அங்கிருந்து கப்பலில் சரக்குகளைக் கொண்டு வருவதற்காக ஆன்லைன் மூலம் இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். 

அந்த நிறுவனத்தினரும், சுண்ணாம்புக்கல் சரக்குகளை காரைக்கால் துறைமுகத்திற்குக் கப்பலில் கொண்டு வந்து இறக்கிவிட ஒப்புக்கொண்டு, 42.42 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்தனர். இந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் கடந்த ஜனவரி மாதம் பூவிழி செலுத்தினார். சரக்கு புக்கிங் செய்த நிறுவனம், அதன்பிறகு பூவிழியை தொடர்பு கொள்ளவே இல்லை. சரக்கும் குறிப்பிட்ட நாளில் வந்து சேரவில்லை. இதுகுறித்து பூவிழி தரப்பில் விசாரித்தபோது, இந்தோனேசியாவைச் சேர்ந்த அந்த நிறுவனத்தார் திட்டமிட்டு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். சரக்கு புக்கிங் செய்த இந்தோனேசிய நிறுவனத்தின் கிளை கொல்கத்தாவில் இயங்குகிறது. அங்கு மேலாளராக பணியாற்றி வந்த எஸ்.சி.ஜனா (45), ஊழியர்கள் எம்.சி.குண்டு, ஆர்.கே.நாக், தீபக் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வந்தனர். 

இவர்களில் எஸ்.சி.ஜனா கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த சேலம் மாவட்டக் காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். விசாரணையில், பூவிழியிடம் மோசடியாக பெற்ற பணம், இந்தோனேசியாவில் உள்ள தீபக்கிடம் கொடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. ஜனாவை காவல்துறையினர் சேலம் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய தீபக் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.