Skip to main content

''தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது''-தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி 

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

N

 

சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பேசுபொருளாகி இருக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரும் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என சொல்கிறார்கள். சனாதனம் என்பதன் உண்மையான அர்த்தம் என்னவென்று கேட்டால் யாருக்குமே தெரியாது. சனாதனம் என்பதற்கான உண்மை விளக்கத்தை யார் கிட்ட வேண்டுமானாலும் கேளுங்கள் யாருக்கும் தெரியாது. நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. சனாதானத்தை ஒழிப்போம் என்று சொல்லி அதற்கு ஒரு மாநாடு நடத்துகிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிறது.

 

கொசுவை ஒழித்து விட்டோம், டெங்குவை ஒழித்து விட்டோம் என்று சொல்கிறார் உதயநிதி. அவையெல்லாம் பெரிய விஷயமே அல்ல. அவர்கள் ஒழிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. வறுமையை ஒழிக்க வேண்டும்; லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டும்; குண்டும் குழியுமாக இருக்கின்ற சாலையை ஒழிக்க வேண்டும்; விலைவாசி உயர்வை ஒழிக்க வேண்டும்; அது மட்டுமல்ல டாஸ்மாக் கடைகளில் ஒழிக்க வேண்டும். இப்படி தமிழ்நாட்டில் மக்களுக்காக ஒழிக்க வேண்டிய நிறைய விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது. அதையெல்லாம் செய்து தமிழ்நாட்டை மக்களுக்கான நாடாக, இந்தியாவின் முதன்மை மாநிலமாக கொண்டு வந்தால் கொண்டு வந்தால் வரவேற்கலாம்.

 

இன்று இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் குறிப்பாக திமுக அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்களே ஒழிய அடுத்த தலைமுறைக்கான அரசியலை நிச்சயம் செய்யவில்லை. அடுத்த தேர்தல் வருவதால் உடனே சனாதனம் என்கிறார்கள். இதனால் யாருக்கு என்ன பலன். நமக்குள்ள ஏதாவது பாகுபாடு இருக்கிறதா? நமக்குள் எந்த பாகுபாடும் இல்லை. எந்த பிரிவினையும் இல்லை. தேர்தல் ஆதாயத்திற்காக இந்த வார்த்தையை பயன்படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியை உண்டாக்குவது திமுக. அதுவும் குறிப்பாக உதயநிதி'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல” - கமல்ஹாசன்

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
kamalhassan said This is not the time to blame the government for the Chennai floods

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக சிலர் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இது அரசை குறைகூறும் நேரமல்ல என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், மக்களுக்கு என்ன செய்வது என்பது மட்டுமே உடனடியாக செய்ய வேண்டும் அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல. ஆனால் அரசை விமர்சிக்க கூடாது என்று கூறவில்லை. பேரிடர்கள் என்பது யாராலும் கணிக்க முடியாது; மக்களுக்கு நீண்ட கால தீர்வை கொடுக்க வேண்டும்; அதற்கான நடவடிக்கை தேவை. நாம் எதிர்பார்த்ததை விட இந்த முறை அதிக மழை பெய்ததால் நமக்கு பாதுகாப்பு குறைவாக தோன்றுகிறது. அரசு இயந்திரம் ஒரு கோடி மக்களை உடனே சென்றடைவது என்பது சாத்தியமில்லை. அதனால் நாம் நமக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். மக்கள் நீதிமய்யம் சார்பாக மருத்துவ முகாம் இன்று நடத்தப்படுவதாக இருந்தது; ஆனால் இனிமேல்தான் மக்களுக்கு நோய் தொற்று அதிகரிக்கும் என்பதால், நாளை முதல் நடத்தப்படும்” என்றார். 

Next Story

“தேர்தலில் நத்தம் தொகுதியில் மட்டும் 2 லட்சம் ஓட்டுகள் வாங்க வேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

2 lakh votes should be bought Natham constituency alone elections says Minister sakkarapani

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

 

திண்டுக்கல் மேற்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் சாணார்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி வரவேற்றார். எம்.பி.வேலுச்சாமி, முன்னாள் எம்எல்ஏ ஆண்டியம்பலம், மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

 

கூட்டத்திற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். குறிப்பாக நத்தம் சட்ட மன்ற தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்து ஐயாயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தார். இதற்கு நீங்கள் தான் காரணம். கடந்த முறை நாம் எதிர்க் கட்சியாக இருந்தோம். ஆனால் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கிறோம். தமிழ்நாடு முதல்வர் கடந்த 30 மாதங்களில் செயல்படுத்திய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா டவுன்பஸ், பள்ளிகளில் காலை உணவு திட்டம், 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வீடு வீடாக சென்று எடுத்துக் கூறி வருகிற பாராளுமன்றத்தில் வாக்காளர் மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். 

 

நத்தம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அரசு கல்லூரி, புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், அமராவதி, காவேரி, ஆற்றின் உபரி நீர்மூலம் குளங்களை நிரப்பும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நத்தம்  சட்டமன்ற தொகுதியில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளில் 2 லட்சம் வாக்குகள் திமுக பெற வேண்டும். இதற்கான பணியை உடனடியாக நீங்கள் தொடர வேண்டும்” என்று கூறினார்.