
தேனி மாவட்டத்தில் முன்னாள் தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் ஒரே நாளில் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நேற்று வரை 2,494 பேர் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். தேனியில் 51 பேர், பெரியகுளத்தில் 18 பேர், கம்பத்தில் 16 பேர், கூடலூரில் 6 பேர், வடுக பட்டியல் 6 பேர், உத்தமபாளையம் அம்மாபட்டி கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், போடி பழனிசெட்டிபட்டி தேவதானப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,
இதில் அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரி செவிலியர், மங்கலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை, நீதிமன்ற அலுவலக உதவியாளர், மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஒருவர், பொதுப்பணித்துறை குடியிருப்பில் இருக்கும் இரண்டு ஊழியர்கள் ஆகியோருக்கு தொற்று உறுதி ஆனது.
இன்று காலை வரை மேலும் 126 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,620 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாவட்டத்தில் ஒரே நாளில் கரோனா தொற்றால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 70 வயது முதியவர், தேனி முல்லை நகரைச் சேர்ந்த 55 வயது முதியவர், சின்ன ஒப்பிலாபுரத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர், கடலூரைச் சேர்ந்த 60 மற்றும் 70 வயது மூதாட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சின்னமனூர் ஊரைச் சேர்ந்த முன்னாள் தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இப்பகுதியைச் சேர்ந்த 73 வயது முதியவர் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் உறுதியானது. இதனை அடுத்து சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இப்படி நாளுக்கு நாள் தேனி மாவட்டத்தில் கரோனா அதிகரித்து வருவதைக் கண்டு மக்களும் பீதியடைந்து வருகிறார்கள்.