சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, தமிழகத்திற்கு வந்து, இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுடன் இன்று (15/04/2022) காணொளி காட்சி வாயிலாகக் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் இ.ஆ.ப., அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப., ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் இ.ஆ.ப. மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எல்லைக்கோடுகளும் கடலும் நம்மைப் பிரித்தாலும் இலங்கைத் தமிழர்கள் என்றுமே நம் உறவுகள் என்ற தமிழுணர்வோடுதான் நாம் செயல்படுகிறோம்! நெருக்கடியில் சிக்கித் தமிழகம் வந்துள்ள அவர்களது இன்னல்களைக் களைவோம்! தேவைகளைக் கேட்டறிந்து தீர்ப்போம்! மனிதம்தான் நமது அடிப்படை!" என்று குறிப்பிடுள்ளார். அத்துடன், இலங்கை தமிழர்களுடன் கலந்துரையாடிய காணொளியையும் பதிவிட்டுள்ளார்.