Skip to main content

பல நாட்கள் நோட்டமிட்டு ரூ.18 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு...! விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

theft at viluppuram doctors house

 

 

விழுப்புரம் நகரில் உள்ளது கே.கே நகர். இந்த நகரின் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் டாக்டர் ராம சேது. இவர் கே.கே சாலையில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.  இவரும் இவரது மனைவி லட்சுமியும் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதுண்டு. 

 

அதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கீழ்பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இவரது நண்பரிடம் தனது வீட்டு சாவியை கொடுத்து அவ்வப்போது வீட்டினை வந்து பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு தனது மகன் வசிக்கும் பெங்களூருக்கு சென்றுவிட்டனர். அவரது நண்பர் வாரம் ஒரு முறை டாக்டர் வீட்டிற்கு வந்து பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊத்திவிட்டு செல்வாராம், அதன்படி நேற்று டாக்டர் வீட்டிற்கு அவரது நண்பர் வந்துள்ளார். 

 

அப்போது அந்த வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் உடனடியாக பெங்களூரில் உள்ள அவரது நண்பர் டாக்டர் ராமசேதுவை தொடர்புகொண்டு தகவலை கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரினையடுத்து விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி நல்லசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை நடத்தி உள்ளனர். 

 

அதில், ராமசேது அடிக்கடி வெளியூர் சென்று வருவதும் இதனால் பல நாட்கள் அவர்  வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் எந்தவித பயமுமின்றி  மிகவும் துணிவோடு  அந்த வீட்டில் புகுந்து கொள்ளை நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டின் உள்ளே உள்ள 2 அறைகளில் இருந்த பீரோக்களின் பூட்டை உடைத்து திறந்துள்ளனர். அதில் துணிமணிகள் தவிர வேறு எதுவும் இல்லாததால் அதை அலங்கோலமாக கலைத்து போட்டுவிட்டு படுக்கை அறையின்கட்டிலின் கீழ்ப்பகுதியில் தரையில் புதைக்கப்பட்டு இருந்த லாக்கரை கண்டுபிடித்துள்ளனர். அதனை உடைத்து அதில் இருந்த 60 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

 

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது புதிய பேருந்து நிலையம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் வரை சென்றது சாய்னா. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை கொள்ளைப்போன நகையின் மதிப்பு 18 லட்சம் என்று கூறப்படுகிறது கொள்ளையர்களை பிடிப்பதற்கு போலீஸ் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.