Skip to main content

குடிமராமத்து குளத்தில் புதையலாக கிளம்பும் தாழிகள்!!! பாதுகாப்பு வளையமிட்ட இளைஞர்கள் ஆய்வு செய்ய கோரிக்கை...

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

history

 

தமிழர்களின் வரலாறு, வாழ்க்கைமுறை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வரலாற்று சான்றுகள் பல ஆயிரம் ஆண்டுகளாக புதையுண்டு கிடக்கிறது. கீழடியில் தமிழ் எழுத்து கிடைத்துள்ளது உலக தமிழர்களை தலைநிமிரச் செய்தது. அடுத்தடுத்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் நிலையில் மிருகத்தின் எழும்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தொல்பொருள் புதையுண்டு கிடப்பதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றங்களை நாடியுள்ளனர் தொல்லியல் ஆர்வலர்கள். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் மங்களநாடு – தஞ்சை மாவட்டம் மணக்காடு ஆகிய கிராமங்களுக்கு இடைப்பட்ட அம்பலத்திடல் என்னும் இடத்தில் வன்னி மரங்கள் நிறைந்த வில்வன்னி ஆற்றங்கரையில் கருப்பு சிவப்பு முதுமக்கள் தாழிகள், தாழிகளுக்குள் எழும்புகள், சிறு சிறு பானைகள் என சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பல இடங்களிலும் பரவியுள்ளது. பழங்கால செங்கல், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கோடாரி என பல பொருட்கள் கண்டறியப்பட்டது. அந்த இடம் ஆய்வு செய்யப்பட்டால் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறுகள் கிடைக்கும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில்தான், தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள கட்டயன்காடு கிராமத்தில் உள்ள அய்யனார் குளம் குடிமராமத்துப் பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களாக நடந்து வரும் நிலையில் சில அடி ஆழத்தில் பழமையான கருப்பு சிவப்பு வண்ணத்தில் பெரிய பெரிய சுடுமண் தாழிகள் வெளிப்படத் தொடங்கி உள்ளது. பல தாழிகள் உடைந்து பாதி அளவில் உள்ளது. இதைப் பார்த்த கிராம இளைஞர்கள் தாழிகளை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தாழிகள் காணப்பட்ட இடங்களை சிவப்பு கொடி நட்ட பாதுகாத்து வருகின்றனர்.

 

 

history


இது குறித்து அப்பகுதி கிராம இளைஞர்கள் கூறும் போது.. புதைந்துள்ள தமிழர்களின் வரலாறுகள் இப்படி தோண்டத் தோண்ட வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்தான் எங்கள் கிராமத்தில் கிடைத்துள்ள தாழிகளை ஆய்வு செய்வதுடன் மேலும் ஏதேனும் வரலாற்று சான்றுகள் கிடைக்கிறதா என்பதை தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும். அதனால்தான் தாழிகள் கிடைத்த பகுதியில் மராமத்துப் பணிகளை நிறுத்தி வைத்து கொடி நட்டு பாதுகாத்து வருகிறோம். இதுகுறித்து தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கும் தகவல் கொடுத்திருக்கிறோம். இது குறித்து ஆய்வு செய்ய தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆய்வு செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.


இந்த தாழியை பற்றி பல தொல்லியல் ஆய்வுகள் செய்துள்ள ஆய்வாளர்களிடம் கருத்து கேட்ட போது..

இந்த தாழியை (படமாக) பார்க்கும்போது சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாக தெரிய வருகிறது. இந்த தாழிகள் முதுமக்கள் தாழியாகவும் இருக்கலாம் அல்லது தானிய குதிராகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. அதாவது தாழியாக இருந்தால் அது புதைவிடமாக இருக்கலாம். புதைவிடமாக இருந்தால் அதிலிருந்து சற்று தூரத்தில் மக்களின் வாழ்விடம் இருக்க வாய்ப்புகள் உள்ளது. அல்லது தானிய குதிராக இருந்தால் அதில் பழைய நெல் மணிகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் மிகத் துள்ளியமாக ஆய்வு செய்தால் தமிழர்களின் கலாச்சாரம், வரலாற்றை அறியலாம் மேலும் பானைகளில் எழுத்துகள் இருக்கிறதா என்பதை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். வரலாற்றை அறிய பலரும் ஆவலாக உள்ளனர். ஆய்வாளர்கள் விரைந்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.