Skip to main content

எங்களிடம் பேசாவிட்டால் ஜவுளி ஏற்றுமதி முடங்கும்...?

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

ஜவுளி தொழிலின் கேந்திரமா இருக்கிறது ஈரோடு, பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கம் என தொடங்கி மகாராஷ்ட்ரா, கேரளா, கர்நாடகா என அனைத்து மாநில வியாபாரிகளும் ஈரோடு வந்து ஜவுளி ரகங்களை மொத்தமாக விற்பனைக்கு வாங்கிச் செல்வது வழக்கம். அதேபோல் தான் மஞ்சள் விற்பனையும் வட மாநில மஞ்சள் வியாபாரிகள் தங்களின் விற்பனைக்காக ஈரோடு மஞ்சளை வாங்கிச் செல்கிறார்கள். இப்படி இந்த தொழில்கள் ஏதோ வியாபாரிகள், விற்பனையாளர்களுடன் நிற்பதில்லை. இதன் பொருட்களை ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் சுமக்கும் சுமை பணியாளர்கள் மிக முக்கியமானவர்கள்.

 

Textile exports will stop if you don't talk to us ...?

 

ஈராேட்டில் ஜவுளி சார்ந்த நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. வெளியூர் நிறுவனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் சரக்குகள், இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் ஏற்றி இறக்கி வருகின்றனர். சரக்கு போக்குவரத்து நிறுவனங்களுக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது. கூலி உயர்வு பேச்சுவார்த்தை இவ்வாண்டு நடத்தப்படவில்லை அதை தாமதிக்காமல் உடனடியாக நடத்த வேண்டும். என்பதோடு சில ஜவுளி கடை முதலாளிகள் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு விரோதமாக நீதிமன்றத்தில் போட்டுள்ள  வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட அனைத்து சுமை தூக்குவோர் மத்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம் தலைமை வகித்தார். மற்ற சங்க தலைவர்களான விஜயகுமார், அயன்துரை, இளையராஜா, பாட்டாளி ஆறுமுகம், சிஐடியு. தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இதில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கூலி உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கவில்லையென்றால் சுமை பணியாளர்கள் காலவரையற்ற ஸ்டைக்கில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் ஏற்றுமதி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.