Skip to main content

2 கோடி ரூபாய்க்கு குறைவான டெண்டர் அறிவிப்பின்போது அவகாசம் வழங்கும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்! – தமிழக அரசுக்கு உத்தரவு!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
high court chennai

 

இரண்டு கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய டெண்டரை அறிவிக்கும்போது, 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற விதியைப் பின்பற்ற வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பழைய கட்டிடங்களை இடிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தை சேர்ந்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தின் டெண்டர் அறிவிப்பு, ஜூன் 26-ஆம் தேதி வெளியிட்டது. டெண்டருக்கு விண்ணப்பிக்க ஜூலை 7-ஆம் தேதி மாலை 4 மணி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் 20-வது பிரிவின்படி, டெண்டர் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளுக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பாணை வெளியிடப்பட வேண்டுமென்ற விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என ஸ்ரீ லக்‌ஷ்மி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்,  அதன் உரிமையாளர் வி.முனிகிருஷ்ணன் என்பவர்,  தெள்ளார் ஊராட்சி ஒன்றிய ஆணையரை அணுகி, இறுதி தேதியைத் தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

 

பின்னர், வேண்டப்பட்டவருக்கு டெண்டர் ஒதுக்கப்படுவதற்காக, தாமதமாக டெண்டர் அறிவிக்கப்பட்டதாகக்கூறி, விதிகளைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்யக்கோரி, அந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

அந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இ.சத்யராஜ் ஆஜராகி, டெண்டர் விதிகளைப் பின்பற்றாமல்,  ஒவ்வொரு முறையும் இதேபோலத்தான் டெண்டர் அறிவிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். கரோனா காலக் கட்டுப்பாடுகளைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு,  அவர்களுக்கு வேண்டப்பட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி வருவதாகவும், இது எதிர்காலத்தில் தொடராத வகையில், நீதிமன்றம் தலையிட்டு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

 

தமிழக அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் இ.பாலமுருகன் ஆஜராகி, மூன்று வெவ்வேறு பணிகளுக்காக மட்டுமே டெண்டர் அறிவிக்கப்பட்டது. ஜூலை 7-ஆம் தேதி டெண்டர் விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால், ஜூலை 9-ஆம் தேதி,  அந்த பணிகள் மற்றொரு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும், டெண்டர் நடைமுறைகள் முடிந்து, அதில் வெற்றி பெற்ற நிறுவனங்கள் பணிகளைத் தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், அரசின் விளக்கத்தின்படி பணிகள் தொடங்கிவிட்டதால்,  மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக்கூறி, ஸ்ரீ லக்‌ஷ்மி கன்ஸ்ட்ரக்சன்ஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

 

அதேசமயம், எதிர்வரும் காலங்களில் இரண்டு கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய பணிகளுக்காக டெண்டர் அறிவிக்கும்போது, தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தின் 20-வது பிரிவின் கீழ், 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற விதியைப் பின்பற்றுவதை மனதில் கொள்ள வேண்டுமென அரசு தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழக அரசுக்கு நன்றி” - குகேஷ் நெகிழ்ச்சி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Thank you to the Government of Tamil Nadu Gukesh 

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் ஆவார்.

அதே சமயம் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கனடாவில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர் குகேஷூக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தொடரில் முதல் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை நடத்திய தமிழக அரசுக்கு நன்றி. அதாவது கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர் உதவியாக இருந்தது. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி - 2023, சென்னை லீலா பேலஸில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

 ரூ.4 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

இந்த நிலையில், நெல்லை சுயேட்சை வேட்பாளர் ராகவன், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24-04-24) நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ‘பணம் பறிமுதல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது’ என்று கூறியது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.