Skip to main content

"எங்களது சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம்"- ஜி.கே.வாசன் எம்.பி. பேட்டி...

Published on 03/01/2021 | Edited on 03/01/2021

 

tamilnadu state congress party g.k.vasan mp press meet

வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்களது சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம் என்று தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

 

மதுரையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி., "50 ஆண்டுகளில் இந்த உலகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிகள் மாறி மாறி நடந்தது. ஆனால் வரப்பிரசாதமாக இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் கீழ் மதுரைக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை வந்திருக்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மதுரை நகரம் மட்டுமல்லாது மாவட்டம் அல்லாது பல்வேறு மாவட்டங்களும் இதனால் பயன்பெறும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. இது மிகப்பெரிய சாதனை என நான் உணருகிறேன். இந்த மருத்துவமனையில் தொடக்கம் ஒரு காலக்கெடுவுக்குள் நடைபெறும் என்பது தென் மாவட்ட மக்களின் விருப்பம், அதற்கு ஏற்றவாறு இதனுடைய உட்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.

 

எய்ம்ஸ் மருத்துவமனையின் நிதி தொகையையும் படிப்படியாக உயர்த்திக் கொள்ள வேண்டும். மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் மிக விரைவில் நடைபெற வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தொடர்பாக விரிவாக விளக்கமாக எடுத்துரைத்துவிட்டார். அந்த பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்பது எனது எண்ணம்.

 

'ஸ்மார்ட் சிட்டி' அந்தஸ்தை மதுரை நகருக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. அத்தகைய 'ஸ்மார்ட் சிட்டி' அந்த சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த பணிகள் எல்லாம் விரைந்து நடைபெற வேண்டும். ஒரு காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இதற்காக விரைவாக ஒரு குழு அமைக்க வேண்டும்.

 

டெல்லியில் நமது விவசாயிகள், ஹரியானா போன்ற பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. இதில் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரி 4- ஆம் தேதியன்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. அந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வேண்டும் என நான் வேண்டுகிறேன்.

 

அப்பாவி விவசாயிகளை எதிர்க்கட்சிகளுக்காக தூண்டிவிட்டு விவசாயம் செய்பவர்களுக்கு நடுவிலே தரகர்களோடு கைகோர்த்துக்கொண்டு உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பாக கூட்டணி குறித்து தமிழகத்தின் முதல்வர் பேசும்பொழுது சென்ற பாராளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வில் இருந்த கட்சிகள் அதே கூட்டணியோடு இருக்கிறது. அதில் மாறுபட்ட கருத்து கிடையாது என்று கூறியுள்ளார்.

 

தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிற வேளையில் கூட்டணி தர்மம் கொடுத்து நடப்பார்கள் என நம்புகிறேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒருங்கிணைப்பாளர், தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியோடு முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்துவிட்டார். எங்களது முதல் குறிக்கோள் அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற வேண்டும். அந்த உறுதியான நிலையில் கூட்டணியிலே இருக்கிறோம் அதுதான் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் கூட்டணியின் இனி வியூகமாக இருக்க வேண்டும்.

 

அதற்குப் பிறகு தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம். விரைவில் தேர்தல் நடக்க இன்னும் இரண்டு மூன்று மாதங்களே உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் கிராம சபைக் கூட்டம் நடத்துவது என்பது தேவையற்ற ஒன்று என்பது தான் மக்களின் எண்ணமாக உள்ளது. இது தேவையில்லாத ஒரு கூட்டத்தைத் திணிக்கும் போது மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது இன்று நடைபெற்ற சம்பவத்தின் மூலம் தெரிகிறது.

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பமாக ஜனநாயக கட்சியாக  சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் வெல்லக் கூடிய நல்ல வியூகத்தை ஏற்படுத்தி உள்ளோம். எங்களது அற்புதமான செயல் இருக்கும். 7 பேர் விடுதலை  என்றால் என்ன, அதன் கூட்டணிக் கட்சிகளின் நிலை என்ன, இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன, என்று தமிழக மக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து காங்கிரஸ் கட்சிகளுக்கும் தெரியும்.

 

ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்கிற முறையில் சொல்கிறேன், நிச்சயமாக எங்களது சின்னத்தில் தான்  சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். ரஜினிகாந்த் என் மரியாதைக்கு உரியவர், அவர் உடல் நலம் சரியில்லை. அதன் அடிப்படையில் அவர் இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை என்று அறிவித்துவிட்டார். அது யாராக இருந்தாலும் பொருந்தும், எனக்காக இருந்தாலும் பொருந்தும். ஆகையால் சுட்டிக்காட்டி தவறாக பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் அவர் மீது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது என்பதில் மாற்று கருத்து கிடையாது. ரஜினிகாந்த் நல்லவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் நெருங்கும் போது அந்த முடிவை அவர் எடுப்பார் என நான் நம்புகிறேன். 

 

மு.க.அழகிரி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். நிச்சயமாக தி.மு.க.வில் பெரிய மாற்றம் ஏற்படும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. மதுரை மக்களுக்கு சிறப்பாகப் பணியாற்றியவர் அழகிரி. மத்திய அமைச்சராகவும், தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார் என்பதில் மாற்று கிடையாது" என தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.