மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்த வழக்கில் சட்டப்பூர்வமான காரணங்களுடன் கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளை மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்ப வகை செய்யும் வகையில் நவம்பர் 19- ஆம் தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த யேசுமணி என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

tamilnadu local body election related case  chennai high court

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது மறைமுகத் தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

Advertisment

அரசின் இந்த நடைமுறை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால், அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு முன்பும் மறைமுக தேர்தல் முலமாக தலைவர் பதவிகள் நிரப்பப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மறைமுக தேர்தல் ஊழல் நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் எனக் கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.

மேலும், இந்த வழக்கு மனுவில், சட்டப்பூர்வமான காரணங்கள் ஏதும் கூறப்படாததால், கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை டிசம்பர் 17- ஆம் தேதி தள்ளி வைத்தனர்.