Skip to main content

"தேர்தல் அலுவலர்களை அதற்குக் கட்டாயப்படுத்த முடியாது!" - மாவட்ட ஆட்சியர் பேட்டி!

Published on 27/02/2021 | Edited on 28/02/2021

 

tamilnadu assembly election erode district collector pressmeet

 

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் இன்று (27/02/2021) அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

 

பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், "இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று (26/02/2021) மாலை தேர்தல் தேதியை அறிவித்தது. நேற்றைய தினம் முதலே தமிழகத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் நேற்று (26/02/2021) மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கடைப்பிடித்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இனி நடத்தப்பட மாட்டாது. அனைத்து அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள். பொதுமக்களுக்காக ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு 'பாக்ஸ்' வைக்கப்படும். அதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளிக்கலாம். தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் '1077' என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த எண்ணைப் பயன்படுத்தி பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் '2267672' என்ற டி.ஓ.டி. எண் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 8 ஆர்.ஓ.க்கள் (RO's) அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

அவர்கள் இன்று (27/02/2021) மாலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் தொடர்பான தகவலைப் பரிமாறுவார்கள். நகரப் பகுதிகளில் எந்த ஒரு சுவர் விளம்பரமும், தட்டியும் வைக்க அனுமதி இல்லை. ஆனால், அதே நேரத்தில் கிராமப்புறங்களில் மட்டும் தனியார் இடங்களில் விளம்பரம் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு அந்த கட்டிட உரிமையாளர் அனுமதியும், அந்தப் தொகுதி ஆர். ஒ.க்களிடமும்  அனுமதி பெற வேண்டும்.  ஒரு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரூபாய் 30 லட்சத்து 80 ஆயிரம் வரை செலவு செய்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் முதலில் 2,265 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

 

கரோனா காலகட்டம் என்பதால் 1,050- க்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கூடுதலாக 526 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 2,741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 926 இடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 13 ஆயிரத்து 157 அரசு அலுவலர் பணியாளர்களும், 193 மைக்ரோ அப்சர்வர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நமது மாவட்டத்தைப் பொறுத்தவரை 80 வயதுக்கு மேல் 50 ஆயிரத்து 62 பேர் உள்ளனர். இவர்களுக்குத் தபால் ஓட்டு வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் விரும்பினால் நேரடியாக வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்றும் வாக்குப்பதிவு செய்யலாம். அதற்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

 

நமது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 157 பேர் உள்ளனர். ராணுவ வீரர்கள் 298 பேர் உள்ளனர். மற்றவர்களுக்கு எவ்வாறு ஓட்டு அளிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும். கோபி சத்தியமங்கலம் தொகுதிகளுக்கு கோபி கலை அறிவியல் கல்லூரியில் வாக்குப் பதிவு எண்ணப்படும். அதேபோன்று மற்ற 6  தொகுதிகளுக்கும் சித்தோடு ஐ.ஆர்.டி.டி.யிலும் வாக்குகள் எண்ணப்படும். மாவட்டத்திலுள்ள 2,741 வாக்குச்சாவடி மையங்களில் 111 வாக்குச்சாவடி மையங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. 18 வாக்குச்சாவடி மையங்களில் இணையதள வசதி இல்லை. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வீடியோ மூலம் வாக்குகள் பதிவு செய்யப்படும்.  

 

மாவட்டம் முழுவதும் 76 ஹெல்த் பிரைமரி சென்டர்கள் உள்ளது. வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும். அதேபோன்று வாக்காளர்கள் கிளவுஸ் அணிந்து தான் வாக்குகளைப் பதிய வேண்டும். இதற்காக ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஒரு கிளவுஸ் வழங்கப்படும். தனிமனித இடைவெளியும் பின்பற்ற வேண்டும். மாவட்டத்தைப் பொறுத்தவரை பறக்கும் படையினர் தங்களது பணியைத் தொடங்கி விட்டனர். ஈரோடு மாவட்டத்தில் 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் கடந்த கால தேர்தல் அடிப்படையில்தான் கணக்கிடப்பட்டுள்ளது. மாநகர்ப் பகுதியில் அரசு கட்டிடத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவர் விளம்பரம் அழிக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கண்டிப்பாக கரோனா  தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. அது அவர்கள் விருப்பம்." என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.