Skip to main content

''யாருடைய துணையுமின்றி அறிவாலயம் சென்று விவாதிக்கத் தயார்...'' - ஜெ.வின் வழக்கறிஞர் ஜோதி பேட்டி!

Published on 07/12/2020 | Edited on 07/12/2020

 

 '' Anna Arivalayam is ready to come and discuss without anyone's help ... '' - J's lawyer Jothi interview!

 

அண்மையில் செய்தியாளர் சந்திப்பில், தி.மு.க. எம்.பி ஆ.ராசா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி விமர்சித்திருந்தார். அதேபோல் யார் ஊழல் கட்சி என விவாதிக்கத் தயாரா என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டிருந்தார் ஆ.ராசா. 

 

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி, இன்று சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார் எனச் சொல்லியுள்ளார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் குற்றுயிரும் குலையுயிருமாகச் செய்த ஒரு முதல்வர் என்று சுப்ரீம்கோர்ட்டே சொல்லியிருக்கிறது என்பது அவர்களுடைய கருத்து. மேலும், தி.மு.க மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அ.தி.மு.கவிற்கு எந்த அருகதையும் இல்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். சொடக்குப் போட்டுச் சொல்கிறார், கொள்ளைக்காரி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது எனவும் சொல்லியிருக்கிறார்.

 

இதைப்பற்றி விவாதிப்பதற்கு உங்களுடைய அட்டர்னி ஜெனரலை கூடக் கூட்டி வாருங்கள் எனக் கூறுகிறார். மத்திய அமைச்சராக இருந்த அவருக்கு, மாநில அரசுக்கு அட்டர்னி ஜெனரல் இல்லை என்பது கூடத் தெரியவில்லை. அட்வகேட் ஜெனரல் மட்டுமே மாநில அரசுக்கான தலைமை வழக்கறிஞர். மேலும், ஒரு தனிப்பட்ட நபருடைய வாழ்க்கையில், அட்வகேட் ஜெனரல் பதிலளிக்க வேண்டும் என அவசியமில்லை. ஆனால், இதுகூடத் தெரியாமல் ஆ.ராசா சொடக்குப் போட்டுச்  சவால் விட்டிருக்கிறார். நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 12 வழக்குகளில் 11 வழக்குகளில் ஆஜராகி 11 வழக்குகளில் வெற்றியடைந்தவன்.

 

12-ஆவது வழக்கும் வெற்றியை நோக்கி போய்க் கொண்டிருக்கும் போது, அவரின் உடன்பிறவா சகோதரியாக இருந்தவரின் சதிச் செயலால் வெளியேற்றப்பட்டேன். வெளியேற்றப்பட்டதன் காரணமே, அந்த வழக்கை குட்டிச்சுவர் ஆக்கவேண்டும், அந்த அம்மாவிற்குக் கெட்டப் பெயர் வாங்கித்தர வேண்டும் என்பதுதான். இது நடக்கக்கூடாது என அவர்கள் நினைத்ததாகச் சந்தேகப்படுகிறேன். ஏன்னெனில், நன்றாக சென்றுகொண்டிருந்த வழக்கை கெடுப்பது போல, என்னை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நான் வெளியே வந்தேன். அதன்பிறகு நான் அமைதியாக, வாழ்க்கையைப் பார்த்துவந்தேன். கீழமை நீதிமன்றத்தில், வழக்கில் தண்டனை கிடைத்தது. அதற்குமேல் அப்பீல் செய்து பெங்களூரு கோர்ட்டில் விடுதலையானார்கள். அந்த விடுதலையை எதிர்த்து, பல்வேறு வற்புறுத்தல்களின் பெயரில் அப்பொழுது இருந்த காங்கிரஸ் அரசின் துணையோடு, தி.மு.க சூழ்ச்சி செய்து அப்பீல் செய்தார்கள். அப்பீல் செய்த காலகட்டத்தில் ஜெயலலிதா இறந்துவிட்டார்கள்.

 

தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் சில தேதிகளைச் சொல்லவேண்டும். ஜெயலலிதா முன்னாள் முதலமைச்சராக இருக்கும்போது, இறக்கிறார்கள். அவர், இறந்த தேதி 05.12.2016. தீர்ப்பு வழங்கிய தேதி 14.02.2017. இறந்து சுமார் 80 நாட்கள் கழித்துத் தீர்ப்பு வருகிறது. இந்தச் சூழ்நிலையில்தான், அந்த ஜட்ஜ்மெண்ட் வந்தது. இந்தப் புத்தகத்தை யாராவது ராஜாவிடம் கொண்டுபோய்க் கொடுங்கள். நான் கொடுத்ததாகக் கொடுங்கள். படித்துப் பார்த்துவிட்டு, எந்த இடத்தில் உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவை  கொள்ளைக்காரி, அரசியலமைப்புச் சட்டத்தைக் கொலை செய்தவர், அதை மீறியவர், அக்கிரமம் செய்தவர் என, எங்கேயாவது எழுதி இருக்கிறதா என்று கேளுங்கள். இதுதான், அந்தத் தீர்ப்பு வந்த புத்தகம். நான் தரத் தயாராக இருக்கிறேன். எடுத்து அவரிடம் கொண்டுபோய்க் காட்டுங்கள். அவரும் தன்னை வக்கீல் என்று சொல்கிறார். அதனால் அவர் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும். 

 

 '' Anna Arivalayam is ready to come and discuss without anyone's help ... '' - J's lawyer Jothi interview!

 

உனக்கு என்ன அக்கறை எனக் கேட்கலாம், அதற்கு நான் பதில் சொல்கிறேன். நான் நடத்திவிட்டு வெளியில் வந்த வழக்கு, அந்த வழக்கினுடைய தன்மை என்ன என்று எனக்குத் தெரியும். அந்த வழக்கில்  நான் விருப்பப்பட்டு வெளியே வரவில்லை. வெளியேற்றப்பட்டு, நான் வெளியே வந்தேன்.
 

cnc

 

அந்த வழக்கில் அவர் இறந்த பிறகு சட்ட நிலைமை என்ன? தயவுசெய்து நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் வழக்கில் விடுதலையாகி இருக்கிறார் அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி விடுதலை ஆனார்கள் என்ற வியாக்கியானம் எல்லாம் பிறகு. அவர், விடுதலை செய்யப்பட்டார். அதுதான் உண்மை. ராஜா கூட விடுதலையாக இருக்கிறார். அந்த மாதிரி உயர்நீதிமன்றத்தால் விடுதலை ஆக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் விடுதலையாகி அப்பீல் தீர்ப்பு வருவதற்கு முன்னால், அவர் இறந்துவிட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் சட்ட நிலைமை என்ன? அதுதான் முக்கியம்.

 

இறந்து போன மனிதரின் மீது, வழக்குத் தொடர்ந்து நடைபெறலாமா, கூடாதா என்பது ஒரு கேள்வி. இறந்துபோன மனிதரின் மீது, வழக்கு நடக்கக் கூடாது என்பதுதான் சட்ட நிலைமை. இறந்துபோன நபர், அதுவும் எந்தச் சூழ்நிலையில் இறக்கிறார். விடுதலை ஆகிவிட்டார் என்ற சூழ்நிலையில் இறக்கிறார். தீர்ப்பு 80  நாட்களுக்குப் பிறகு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் சட்ட நிலைமை என்ன? தயவுசெய்து சட்ட நிலைமையை ராஜாவிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

 

தேவைப்பட்டால் சொடக்குப் போட்டுச் சொன்னாரே.. நான் வருகிறேன் அண்ணா அறிவாலயத்திற்கு, அவரிடம் விவாதிப்பதற்கு. யாருடைய பாதுகாப்பும் இல்லாமல், தனிப்பட்ட முறையில் நான் வருகிறேன். எனக்கு ஒரு பயமும் இல்லை. செக்சன் 394 குற்ற நடவடிக்கைகள், நடைமுறைச் சட்டம் 394 உட்பிரிவு 2. இதில் விடுதலையான பிறகு, மேலும் எவர் ஒருவர் அப்பீல் செய்து இருக்கிறாரோ, அவர் மீது தீர்ப்புச் சொல்லக்கூடாது. அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது தான் சட்டம். இது குறித்து கேள்விகளை பின்னர் கேட்கலாம்.

 

nkn

 

394 (2 சி.ஆர்.பி.சி) இதன்படி இறந்து போனவர்கள் மீது எவ்விதமான குற்றச்சாட்டுகளும் நீர்த்துப் போகிறது. அதுவும் குறிப்பாகத் தண்டனை பெற்று அவர் போகவில்லை விடுதலையாகிதான் போயிருக்கிறார். அந்தச் சூழ்நிலையில் அவரது விடுதலையை ஊர்ஜிதப்படுத்த வேண்டும் என்பதுதான் சட்ட நிலைமை. இப்படியிருக்கும் பொழுது உச்சநீதிமன்றம் எவ்வாறு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொலை செய்த கொலைகாரி என்று சொல்லமுடியும். சுப்ரீம் கோர்ட்டுக்குச் சட்டம் தெரியாதா? இவருக்குத்தான் தெரியுமா? சுப்ரீம்கோர்ட் அவரை கொள்ளைக்காரி என்று சொல்லவில்லை. காரணம் 394 பற்றி அவர்களுக்குத் தெரியும். இதுதான் உண்மை. இன்னும் சொல்லப்போனால், இந்த வழக்கை நடத்திய சசிகலா குரூப் என்ன செய்து இருக்க வேண்டும் என்றால், அந்த அம்மா இறந்தவுடனே, இறப்புச் சான்றிதழோடு ஒரு மெமோவை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்க வேண்டும். 

 

அவர் இறந்துவிட்டார். மேற்கொண்டு, வழக்கை நடத்த வேண்டாம் எனத் தாக்கல் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்ததாக நீதிமன்றத் தீர்ப்பில் இல்லை. சசிகலா தரப்பு ஏன் இதைத் தாக்கல் செய்யவில்லை. இந்தக் கேள்வி முக்கியமான கேள்வி. ஏனென்றால், அவர் (சசிகலா) முதலமைச்சராக ஆவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த நேரம். தன்னுடைய சுய லாபத்திற்காக, இதை அவர் செய்யவில்லை. அதைச் செய்திருந்தால், இந்த வழக்கில் ஜெயலலிதா பெயரே வந்திருக்காது என்பதுதான் சட்ட நிலைமை" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.

Next Story

களேபரமான அதிமுக பயிற்சி வகுப்பு; இ.பி.எஸுக்கு எதிராக கலகக் குரலெழுப்பும் பேச்சாளர்கள்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
AIADMK speakers raising their voices against Edappadi Palaniswami

ஒரு இயக்கமோ அல்லது ஒரு நிறுவனமோ ஆலமரம் போன்று ஓங்கி உயர்ந்து நிற்பதற்கு மூலக் காரணமே, மண்ணில் வேர் பரப்பி நிற்கும் சல்லி வேர்களே. இயக்கங்களின் பேச்சாளர்களே அந்த சல்லி வேர்கள். பிரச்சாரங்களில் பேசிப் பேசித்தான் ஒரு கட்சி வளரும் என்பதை தெளிவாக உயர்ந்த அறிஞர் அண்ணா, கலைஞர், தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வரை அறிந்து கொண்ட தலைவர்கள், கழகத்தின் பேச்சாளர்களுக்கு இன்றளவும் ஊக்கம் கொடுத்து வருகின்றனர். தந்தை பெரியார் கூட தனக்கான பிரச்சாரத்தின் பீரங்கியாகவே தன்னை மாற்றிக் கொண்டார்.

இதே தத்துவத்தைப் புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரும் அ.தி.மு.க. தொடங்கியதும் தன் கட்சியின் பேச்சாளர்களை வகைப் படுத்திக்கொண்டார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் கட்சிப் பேச்சாளர்களை தலைமைக் கழகப் பேச்சாளர்களாகத் தேர்வு செய்து அதில் நட்சத்திரப் பேச்சாளர்கள், மற்றும் ஏ.பி.சி. கிரேடுகள் என்று நான்கு வகையாக்கிக் கொண்டார். பின்பு அவர்களுக்கான பிரச்சாரக் கூட்டங்களை கட்சி நிர்வாகிகளின் மூலமாக மேற்கொள்ள வைத்து, அதற்கான சன்மானமும் நிரந்தரமாக கிடைக்க வகை செய்ததுடன், ஒவ்வொரு வருடமும் அத்தனை தலைமைக் கழகப் பேச்சாளர்களையும் வரவழைத்து அவர்களின் கிரேடுகளுக்கு ஏற்ப கனமான தொகையினை அன்பளிப்பாகவும் வழங்குவதை தவறாமல் மேற்கொண்டார்.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் ஆரோக்கியமாக இருந்ததாக தெரிவிக்கிற அ.தி.மு.க.வின் பேச்சாளர்களில் சிலர், “ஜெயலலிதா காலமான பின்பு எடப்பாடி ஆட்சியில் எங்களுக்கான பொதுக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதா கவனித்ததைப் போன்று எடப்பாடி தங்களைக் கவனிக்காததால் கடந்த ஐந்து வருடத்தில் எங்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிட்டது. வறுமையில் கட்சியின் கவனிப்பாரின்றி பல பேச்சாளர்கள் மரணமடைந்து விட்டனர். ஆனால், தற்போது எம்.பி.தேர்தல் வருவதால் வேறு வழியின்றி தேர்தலுக்காக எடப்பாடி எங்களின் பக்கம் திரும்பியுள்ளார்” என்றவர்கள் தலைமையின் பயிற்சியில் நடந்தவைகளை விவரித்தார்கள்.

எடப்பாடியின் உத்தரவுப்படி அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளரான தம்பிதுரை, கட்சியின் தலைமைக் கழகத்தின் நட்சத்திர பேச்சாளர்கள், 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட பேச்சாளர்கள் அனைவரும் எம்.பி. தேர்தலை முன்னிட்டு தங்களுக்கான முறைப்படியான கட்சி பயிற்சி பாசறைக் கூட்டம் மார்ச் 01 அன்று சென்னை எழும்பூரிலுள்ள ஹோட்டல் இம்பீரியல் சிராஜ்ஜில் நடைபெற இருப்பதால், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்துப் பேச்சாளர்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.

தேர்தல் நேரம், கட்சித் தலைமையே வரச் சொல்லி அழைப்பு என்பதால், தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பாகவே நமக்கான நல்லதொரு தொகையும், கட்சிக் கூட்டத்திற்கான வாய்ப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான கட்சியின் பேச்சாளர்கள் சென்னை சென்று வர செலவிற்கானதை வட்டிக்கு கடன் பெற்றும், பொருட்களை ஈடு வைத்தும் கிடைத்த பணத்தில் சென்னை பயிற்சி கூட்டத்திற்கு திரண்டு போயிருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வின் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் மொத்தமுள்ள 450 பேர்களில் 350க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் அன்றைய தினம் எழும்பூர் இம்பீரியல் ஹோட்டல் அரங்கில் கூடியிருக்கிறார்கள். அனைவரும் அழைப்பிதழ்படி சரிபார்க்கப்பட்டுள்ளனர். மேடையில் கொள்கை பரப்புச் செயலாளரான தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, கட்சிப் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் அன்பழகன் பொன்னையன், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், செம்மலை, நடிகரும் டைரக்டருமான கொ.ப.துணை.செ.வான ரவி மரியா, கொ.ப.இணை செ.வான நடிகை விந்தியா, அமைப்பு செ.வான பாப்புலர் முத்தையா, கோபி. காளிதாஸ் என்று பலர் அமர்ந்திருக்க மேடையின் கீழேயோ, அ.தி.மு.க.வின் சீனியர் நட்சத்திரப் பேச்சாளர்கள் குறிப்பாக பேச்சில் ஜாம்பவன்களான நெத்தியடி நாகையன், கடலூர் அன்பழகன், உள்ளிட்ட மூத்த பேச்சாளர்கள், தரையில் அமர்ந்திருந்தார்கள்.

ஆரம்பத்தில் மைக் பிடித்து பேசிய ரவி மரியாவும், நடிகை விந்தியாவும், கட்சிப் பேச்சாளர்கள் நீங்க எப்படி பிரச்சாரம் பண்ணனும்னா எம்.ஜி.ஆர்.பத்தி இப்படி பேசனும், கலைஞர் குடும்பத்தப் பத்தி இந்த மாதிரி பேசனும்னு சொல்லிக் கொண்டே போக, ஆத்திரமான பேச்சாளர்களோ, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து ஜெயலலிதா அடுத்து எடப்பாடி வரையிலான கட்சியின் தலைமைக் கழக சீனியர் பேச்சாளர்களான நாங்க. எதை எப்புடி பேசணும்னு எங்களுக்குத் தெரியும். யாரு யாருக்கு வகுப்பு எடுக்கிறது. பேச்ச நிறுத்துங்கள் என்று பேச்சாளர்கள் கடுங்குரலெழுப்ப, மைக்கை பிடித்தவர்களோ ஷாக்கில் பேச்சை நிறுத்திக் கொண்டனர். மூத்த பேச்சாளர்களான தங்களுக்கு மேடையில் எல்.கே.ஜி. நிலையிலிருப்பவர்கள் வகுப்பெடுப்பதா என்கிற கடும் கோபம் தான் அமளிக்கு காரணம் என்கிறார்கள்.

எதிரேயுள்ள பேச்சாளர்களின் ஆவேசத்தால் எதிர்ப்பால் மேடையிலுள்ளவர்கள் சற்று யோசிக்க ஆரம்பிக்கவே, தம்பித்துரையோ, வந்திருக்கும் பேச்சாளர்கள் அனைவரும் பசியிலிருப்பதையும், பணத்தை எதிர்பார்த்து வந்திருக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்ந்த தம்பித்துரை, “நா பல காலேஜ்க வெச்சிருக்கேம்னு நீங்க நெனைக்கிறீங்க. அது என்னோட கல்லூரிகளல்ல. ஒரு டிரெஸ்ட்டுக்குச் சொந்தமானது. என் வீட்ல வந்து பாருங்க ஒரு பீரோவும் கட்டிலும் தான் இருக்கும். சரஸ்வதி மாதிரி என்ட்ட பணமெல்லாம் கெடையாது. வெறும் ஆளாயிருக்கேன். ஆனா லட்சுமி (பணம் வைத்திருக்கும் கடவுள்) தான் பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன். அவர் கஜானாவத் தொறந்தாத்தான் நடக்கும். என்ட்ட ஒன்னுமில்லை என்று பேசியுள்ளார். இதனால் ஆத்திரமான பேச்சாளர்கள் கடும் குரலில் பேச்ச நிறுத்திட்டு தம்பிதுரையை உட்கார சொன்னதும் கூட்டம் அமளியானது.

இதற்கிடையே எல்லை கடந்து ஆத்திரத்தையும், கொதிப்பையும் அடக்கியவாறு மேடையேறிய சீனியர் பேச்சாளரான கடலூர் அன்பழகன் நேராக தம்பிதுரையை நோக்கிச் சென்றவர் தன் கையில் வைத்திருந்த சால்வையை அவருக்கு அணிவித்துவிட்டு யாரும் எதிர்பாராத வகையில் மைக்கை பிடித்தவர், 17 வருஷமா கட்சியில கொ.ப.செ.வா நீங்கயிருக்கீங்க. உங்களால் கட்சி பேச்சாளர்களுக்கு ஒரு பிரோயஜனமுமில்லை. ஆனால் கட்சிய வைச்சி சம்பாரிச்சவுங்களுக்கு எத்தனை கால்லூரிகள் ஏக்கர் கணக்கில் நிலம். யாரெல்லாம் கட்சிய வைத்து சம்பாதிச்சாங்கன்னு எங்ககிட்ட லிஸ்ட் இருக்கு. எடுத்து விடவா? எங்களுக்கு நல்லாவே தெரியும். எல்லோரும் கேட்டுக்குங்க. ஜெயலலிதா இறந்த பிறகு  தலைமை கழகப் பேச்சாளர்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது. பேச்சாளர்கள் நிலை நெருக்கடி கஷ்டம். எடப்பாடியிலிருந்து கீழ்மட்ட நிர்வாகி வரை எங்களை கண்டுக்கவில்லை.

தலைமை அறிவிச்ச கூட்டத்த எந்த ஒரு மா.செ. ந.செ. ஒ.செ. கூட நடத்துறதில்ல. அப்படியே கூட்டம் போட்டாலும் மேடைக்கு வந்த மா.செ. 10 நிமிசத்தில் கூட்டத்த முடிச்சிட்டு கிளம்பிடுறாங்க. ஒரு கூட்டம் பேச ஏற்பாடு. அந்த மா.செ. எனக்கு போன் பண்ணி அண்ணே நீங்க வந்தூருங்க வராம இருந்துராதீங்க, ஊருக்கு வந்ததும் எனக்கு போன் பண்ணுங்க என்று சொன்னார். நானும் பேசினா கூலி கிடைக்கும் என்று கடனுக்கு 3000 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு அந்த ஊருக்கு போய் பஸ் ஸ்டாப்ல இறங்கிட்டு அந்த மா.செ.க்கு போன் பண்ணேன். அவர் வந்ததும் சாப்டிங்களான்னு கேட்டு டிரைவர்ட்ட நூறு ரூபாய குடுத்து அவுங்களுக்கு சைவச் சாப்பாடு வாங்கிக் குடுன்னு சொன்னார்.

பின்பு உடனே, என்கிட்ட, நோட்டீஸ் அடிச்சாச்சு மேடை போட்டாச்சு சீரியல் பல்பு போட்டு மைக் கட்டியாச்சு. கூட்டத்துக்கு ரெடியா சேர்களும் போட்டாச்சு. ஆனா கூட்ட மேடைக்கிப் பக்கத்துல ஒரு வீட்ல துக்க சம்பவமாயிருச்சி. கூட்டம் நடத்த முடியாத நெலமையாயிருச்சு. என்ன செய்ய. அதனால இந்தாங்க புடிங்கன்னு ஒரு கவர்ல மூவாயிரம் ரூபாயப் போட்டுக்குடுத்து ஊர் போய் சேருங்கன்னு சொல்லிட்டாரு. எனக்கு பக்குன்னு ஆயிருச்சி. அப்புறமா அந்தப் பகுதி ந.செ. ஒ.செ. கட்சிக்காரங்க கிட்ட இதப் பத்தி விசாரிச்சா நீங்க சொன்ன மாதிரி பொதுக் கூட்ட மேடையும் போடல எந்த வீட்லயும் எழவு விழலன்னு சொன்னதக் கேட்டு ஆடிப் போனேம். கட்சியில் இப்படித்தான் நடக்கு என ஆவேசத்தைக் கொட்டி முடித்திருக்கிறார் கடலூர் அன்பழகன்.

இதற்கிடையே அன்பழகன் என்னைய ஒருமைல பேசிட்டார்னு தம்பித்துரை தலைமை கழகச் செ. மகாலிங்கத்திற்கு போனில் தகவல் சொல்லி புலம்ப, அதை அன்பழகனிடம் மகாலிங்கம் கேட்க, நான் யாரையும் ஒருமையில பேசல. நடந்த உண்மையைச் சொன்னேன் என்று லைனை துண்டித்திருக்கிறார். அரங்க நிலவரம், பேச்சாளர்களின் கொதிப்புகளை நோட்டமிட்ட எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், கட்சியின் பேச்சாளர்கள் ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள். நாம அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு நழுவிக் கொண்டார்.

பின்பு பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனோ, இந்த இயக்கம் கட்சிப் பேச்சாளர்களால் பேசிப் பேசி வளர்க்கப்பட்ட இயக்கம். தலைமைக் கழகப் பேச்சாளர்களுக்கு மரியாதையில்லை. நீங்க ஒவ்வொருத்தரும் இங்க கௌம்பி வர வட்டிக்கு கடன் வாங்கியும், இருக்குற செயின் மோதிரத்தையும் அடமானமா வைத்தும்  கஷ்டப்பட்டு இங்க வந்தது என்குத் தெரியும். நான் உங்களுக்கு ஏதாவது பண்ணனும். என்ன பண்ணன்னு தெரியல. உங்கள நெனைச்சா எனக்குப் பாவமாயிருக்கு என வேதனையைக் கொட்டிவிட்டுச் சென்றார்.

குழப்பத்திற்கிடையே மைக் பிடித்த கட்சியின் பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசனோ, எனக்கு எல்லா விபரமும் தெரியும். நான் எடப்பாடிட்ட பேசிட்டு வந்திட்டேன். நான் முதலமைச்சரா வந்தால் உங்க வாழ்க்கைல ஒளி ஏத்திவைக்கிறேன் என்று சொல்லிருக்காருன்னு சொல்ல, கீழே இருந்த அத்தனை பேச்சாளர்களுக்கும் சுரீர் என்று பற்றிக்கொண்ட வேதனையும் பொறுமையும் எல்லை தாண்ட, யோவ் இப்ப நாங்க இருட்ல உக்காந்திருக்கோம்யா. என்னைக்கி அவரு முதலமைச்சராகி எங்க வாழ்க்கைல ஒளி ஏத்தி வைக்க. அதென்ன நடக்குற காரியமா? என கத்திக் குரலெழுப்ப மிரண்டு போன திண்டுக்கல் சீனிவாசனோ ஓசையின்றி வெளியேறியிருக்கிறார் அவரைத் தொடர்ந்து நிலவரம் கலவரமாவது கண்டு பீதியான பொன்னையனோ பேசாமல் இடத்தைக் காலி செய்திருக்கிறார். இதே போன்று மேடையிலுள்ள அத்தனை பேர்களும் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் வெளியேறிக் காரில் பறந்திருக்கிறார்கள்.

கட்சிப் பேச்சாளர்களோ வேதனையில், ஜெயலலிதா இருக்குறவரைக்கும் எங்க குடும்ப வண்டி சீரா ஓடிச்சி. ஒவ்வொரு வருஷமும் தலைமைக் கழகப் பேச்சாளர்கள நட்சத்திரப் பேச்சாளர்க, கிரேடு 1, 2, 3 ன்னு பிரிச்சு 3 லட்சம் 2½, 2, 1½, லட்சம்னு வகைகளா குடுத்தனுப்புவாக. ஆட்சியில நல்லா சம்பாரிச்சவுங்க, ருசிகண்ட எடப்பாடி உட்பட அத்தன பேரும் எங்களப் புலம்ப வைச்சுட்டாங்க. வெறுங்கையக் காட்டிட்டாங்க. எங்கள அனாதையா விட்டுட்டாங்க, அடிவயிறு கொதிக்க சாபமிட்டுச் சொல்றோம். எங்களுக்கு பணம் கொடுக்கலைன்னா தேர்தல் முடிஞ்ச மறு நிமிஷம் எடப்பாடிய மாத்தணும்னு நாங்க அத்தனபேரும் குரல் குடுப்போம். போராடுவோம் என ஓங்கிச் சொல்லி விட்டுக் கிளம்பியிருக்கிறார்கள் என்றனர் விரிவாக.

தலைமைக் கழகப் பேச்சாளர்களின் இந்தக் கலகக் குரல் எடப்பாடிக்குப் பெரும் தலைவலியைக் கிளப்பியிருக்கிறதாம். தலைமைக்கழகப் பேச்சாளர்களுக்குக் கூட்டத்தில் நடத்தப்பட்ட அநீதி அத்தனையும் சசிகலாவிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதாம். அதையடுத்து அந்தப் பேச்சாளர்களை தன் பக்கம் கொண்டுவர நம்பிக்கையானவர் மூலம் வலைவீசியிருக்கிறாராம் சசிகலா.