![Tamil Nadu staged a road blockade to ban the movie Amaran](http://image.nakkheeran.in/cdn/farfuture/aoJL91lPmi5_gt6Q0T0Y_VW3p7FTANBTP6e313W7Ack/1708582272/sites/default/files/inline-images/Untitled-1_760.jpg)
கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பலரின் கவனத்தை பெற்றது. அதே சமயம், படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
இந்த நிலையில், தேசிய ஒற்றுமைக்காக போராடுகின்ற இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கூறி அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக முழுவதும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் கலீல் ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் முகமது தாஹா, அபூபக்கர் சித்திக், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஷேக்கான், பேரவை மாவட்ட செயலாளர் பீர், மலைக்கோட்டை பகுதி செயலாளர் இப்ராஹிம் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.