Skip to main content

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய தமிழ்ப்பெண்; முதல்வர் வாழ்த்து

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

tamil girl muthamilselvi achievement mount everest cm mk stalin congrats 

 

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை பெற்ற முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஜோகில்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த நாராயணன் - மூர்த்தியம்மாள் என்ற தம்பதியரின் மகள் முத்தமிழ்ச்செல்வி (வயது 38). இவர் தற்போது திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் சென்னையில் வசித்து வருகிறார். மேலும் இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சிறு வயது முதலே மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை புரிய வேண்டும் என்ற கனவோடு இருந்து வந்துள்ளார். மேலும் அதற்கான முயற்சிகளையும் பயிற்சியையும் தொடர்ந்து எடுத்து வந்தார்.

 

இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை அடைய நிறைய நிதி தேவைப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசிடம் தனது கோரிக்கையை முன்வைத்து இருந்தார். மேலும் முத்தமிழ்ச்செல்வியின் கோரிக்கையை  ஏற்றுக்கொண்ட தமிழக அரசு இவரின் தன்னம்பிக்கையை பாராட்டும் விதமாக அரசு சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்திருந்தார்.

 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி எவரெஸ்ட் சிகரம் ஏறத் தொடங்கிய முத்தமிழ்ச்செல்வி தனது பயணத்தின் 51வது நாளான கடந்த 23 ஆம் தேதி ஏறத்தாழ 8 ஆயிரத்து 849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளார். இதற்கிடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முத்தமிழ்ச்செல்வியின் பிறந்தநாளான கடந்த 17 ஆம் தேதி அன்று தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை புரியவும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார். 

 

tamil girl muthamilselvi achievement mount everest cm mk stalin congrats 

 

மலையேற்றத்தின் போது அங்கு நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முத்தமிழ்ச்செல்வி அடைந்துள்ளார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், "உச்சியைத் தொட்டுத் திரும்பியுள்ள சாதனைப் பெண்மணி முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரும் முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.