Skip to main content

வடிவேலு காமெடி பாணி: மோட்டார் சைக்கிளை 'ட்ரையல்' பார்த்துவிட்டு வாங்கிக்கொள்வதாக கூறி 'லவட்டிய' காதல் ஜோடி

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

 

tamil film vadivelu salem lovers motorcycle police investigation


சேலத்தில், வடிவேலு காமெடி காட்சி போல, மோட்டார் சைக்கிளை ட்ரையல் பார்த்துவிட்டு வாங்கிக் கொள்வதாகக்கூறி, காதல் ஜோடியை பணயமாக வைத்துவிட்டு, மற்றொரு காதல் ஜோடி வண்டியுடன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் 'செகண்ட் ஹேண்ட்' மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூம்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. இதே பகுதியில் ராம் சரண் என்பவரும் செகண்ட் ஹேண்ட் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கான ஷோரூம் நடத்தி வருகிறார். 

 

இவருடைய கடைக்கு ஜன. 21-ஆம் தேதி, இரண்டு இளம் காதல் ஜோடியினர் ஒரே நேரத்தில் வந்தனர். அவர்கள் அங்கிருந்த சில விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களின் விலை நிலவரம் குறித்து விசாரித்தனர். 

 

இரண்டு ஜோடிகளில் ஒரு ஜோடியினர், அந்த ஷோரூமில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளைக் காட்டி, அதை வாங்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அதன் விலை குறித்து கேட்டதற்கு, 1.75 லட்சம் ரூபாய் என்று ராம் சரண் கூறியிருக்கிறார். 

 

இந்த விலைக்கு திருப்தி அடைந்த காதல் ஜோடி, வண்டியை ஓட்டிப்பார்த்துவிட்டு திருப்தி என்றால் பணம் கொடுக்கிறோம் என்று கூறியுள்ளது. 

 

கடைக்காரரும், 'அதுதான் ஜாமினுக்கு இன்னொரு காதல் ஜோடியினர் இருக்கிறார்களே... போகட்டும்... எங்க போய்ட போறாங்க... எப்படிப் பார்த்தாலும் நம்மகிட்ட பணயமாக ஆளுங்க இருக்காங்களே...' என்று மைண்ட் வாய்ஸ் ஒலித்ததால், அந்த ஜோடியினர் மோட்டார் சைக்கிளை எடுத்துச்செல்ல அனுமதித்தார். 

 

இதுதான் வாய்ப்பு என்று கருதிய இளம்ஜோடியினர், விருட்டென்று மோட்டார் சைக்கிளில் சிட்டாய் பறந்தனர். அதுக்குள்ள அவசரமா.... சரி... இளசுங்கன்னா அப்படித்தான்... என மறுபடியும் மைண்ட் வாய்ஸ் ஒலிக்க, இன்றைக்கு நல்ல வருமானம் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார். 

 

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பாததால் சந்தேகம் அடைந்த ராம் சரண், அங்கிருந்த காதல் ஜோடியைப் பிடித்து விசாரித்திருக்கிறார். அப்போது அவர்கள் சொன்ன பதில், அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. 

 

அந்த ஜோடியோ, மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களைப் போல நாங்களும் செகண்ட் ஹேண்டில் மோட்டார் பைக் வாங்கத்தான் வந்தோம். அவர்கள் எப்படியெல்லாம் விலை நிலவரம் விசாரிக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு இருந்தோம் என்று கூலாக பதில் சொல்லி இருக்கிறார்கள். 

 

அதன்பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை கடை உரிமையாளர் ராம்சரண் உணர்ந்தார். ஆனாலும் இளம் ஜோடியினர் சொன்ன பதிலால் திருப்தி அடையாத அவர், அவர்களைப் பிடித்துச்சென்று சேலம் நகர குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறை விசாரணையில், மோட்டார் சைக்கிளை லவட்டிச்சென்ற காதலர்களில் இளம் பெண்ணை மட்டும் தனக்குத் தெரியும் என்று பணயமாக வைத்த காதலர்களில் ஒருவர் கூற, சேலத்தில் உள்ள பெண்ணின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

அடுத்த சில மணி நேரத்தில் பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, மோட்டார் சைக்கிளைத் திருடிச்சென்ற வாலிபர், கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பதும், அவர்களுடைய மகளும் பிரவீன்குமாரும் காதலர்கள் என்பதும் தெரிய வந்தது. 

 

ஒரு தமிழ் படத்தில் வடிவேலுவைப் பணயமாக வைத்துவிட்டு, மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்த்துவிட்டு விலை பேசுவதாகச் சொல்லிவிட்டு இருவர் வண்டியை ஓட்டிச்சென்று விடும் காமெடி காட்சி இடம்பெற்றிருக்கும். அதேபோல், உடன் வந்த மற்றொரு காதல் ஜோடியை அவர்களுக்கே தெரியாமல் பணயமாக வைத்துவிட்டு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற காதலர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் சேலம் நகர பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.