Skip to main content

முதன்மைக் கல்வி அலுவலரின் திடீர் ஆய்வு; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

surprise inspection by the  Education Officer; The dismissal of the head teacher!

 

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்தில் சின்னவேலம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், சேலத்தைச் சேர்ந்த பாரதி என்பவர் தலைமை ஆசிரியராகவும், ராஜம் என்பவர் இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றுகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென்று இப்பள்ளிக்குச் சென்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இரண்டு ஆசிரியர்களுமே பணியில் இல்லை. 

 

அங்கு, ஒரே ஒரு பெண் மட்டும் குழந்தைகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது, தான் ஒரு தற்காலிக ஆசிரியர் என்றும் தலைமை ஆசிரியரும், இடைநிலை ஆசிரியரும் பள்ளிக்கு வரும் வரை குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவேன் என்றும் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், பள்ளியில் ஆசிரியர்களின் செயல்பாடு குறித்து விசாரித்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷுக்கு உத்தரவிட்டார். 

 

தலைமை ஆசிரியர் பாரதி, இடைநிலை ஆசிரியர் ராஜம் ஆகியோரிடம் விசாரித்தபோது அவர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு குறித்த நேரத்தில் பணிக்கு வராமல் இருப்பதும், முன் அனுமதியின்றி அவர்களே நியமித்த ஒரு இளம்பெண் மூலம் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வந்ததும் தெரியவந்தது. ஆசிரியர் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக அவர்கள் இருவரையும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் நடந்த பள்ளி, மலைக் கிராமப் பள்ளி ஆகும். இங்கு மட்டுமின்றி அனைத்து மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளிலுமே ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்குச் செல்வதில்லை.

 

மாதம் லட்சம் ரூபாய் ஊதியம் பெறக்கூடிய ஆசிரியர்கள், தங்கள் கடமையைச் சரிவர செய்யாததோடு, உள்ளூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ்2 படித்த இளைஞர்களை தாங்களாகவே நியமித்து, பாடம் நடத்தி வருவதும் நடக்கிறது. அனைத்து மலைக் கிராமங்களிலும் பள்ளிக்கல்வித்துற அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தி, ஒழுங்கீனமாக செயல்பட்டு வரும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் நேர்மையான ஆசிரியர்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.