Skip to main content

திமுகவில் மீண்டும் சுரேஷ் ராஜனுக்கு பதவி; ஆதரவாளர்கள் உற்சாகம்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

Sureshrajan appointed again in DMK; supporters are excited

 

குமரி திமுகவில் அமைச்சராகவும் மாவட்டச் செயலாளராகவும் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டிருந்தவர் சுரேஷ் ராஜன். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் நெருக்கமாகவும் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த  சட்டமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

 

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் மகேஷ்க்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி சுரேஷ் ராஜன் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி, மகேசை பொறுப்பாளராக்கினார் முதல்வர் ஸ்டாலின். இதனால் சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் ஒவ்வொருத்தரையும் ஓரங் கட்டினார் மகேஷ்.

 

Sureshrajan appointed again in DMK; supporters are excited

 

இதற்கிடையில் ஏற்கனவே சுரேஷ் ராஜனுக்கும் மந்திரி மனோ தங்கராஜுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய மனோ தங்கராஜ் மகேஷுடன் சேர்ந்து உட்கட்சி தேர்தலில் பொறுப்பிலிருந்த சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் அந்தப் பொறுப்புகளிலிருந்து தூக்கினார்கள். இதில் ஒரு கட்டத்தில் சுரேஷ் ராஜனிடம் நெருக்கமாக இருந்த பலர் அவரை விட்டுவிட்டு மகேஷ், மனோ தங்கராஜிடம் ஓட்டம் பிடித்தனர்.

 

மேலும் உட்கட்சி தேர்தலில் மா.செ. க்கு போட்டியிடக் கட்சித் தலைமை மகேஷ்க்கு மட்டும்தான் பச்சைக்கொடி காட்டியது. இதனால் கடும் அதிருப்தி ஆனார் சுரேஷ் ராஜன். முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்த சுரேஷ் ராஜன் கட்சிக்குச் செய்த தவற்றால் இனி கட்சியில் எந்த பொறுப்பும் அவருக்குக் கிடைக்காது எனப் பரவலாகப் பேச்சும் எழுந்தது. இந்தக் காரணத்தால் தான் முதல்வரே தேதி கொடுத்து முடிவு செய்யப்பட்ட சுரேஷ் ராஜனின் மகனின் திருமணத்துக்குக் கூட முதல்வர் ஸ்டாலின் வரவில்லை என்றனர்.

 

Sureshrajan appointed again in DMK; supporters are excited

 

இந்த நிலையில்தான் சுரேஷ் ராஜனுக்கு கட்சியில் தணிக்கைக்குழு உறுப்பினர் என்ற மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓரங்கட்டப்பட்டிருந்த சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சென்னையிலிருந்து இன்று (29-ம் தேதி) நாகர்கோவில் வந்த சுரேஷ் ராஜனுக்கு வடசோியில் அவரின் ஆதரவாளர்கள் செண்டை மேளத்துடன் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு திமுக பொறுப்பில் ரீ என்ட்ரி ஆகியிருக்கும் சுரேஷ் ராஜன் மகேசையும் மனோ தங்கராஜையும் சமாளித்து அரசியல் செய்வாரா? அல்லது அவர்களுடன் இணைந்து செயலாற்றுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.