Skip to main content

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

நெல்லை ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடுத்த வழக்கின் உத்தரவுப்படி இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மறுவாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வரும் நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான முடிவுகளை அடுத்த உத்தரவு வரும்வரை வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது 19, 20, 21 சுற்றுகள் மற்றும் 203 தபால் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக  திமுக வேட்பாளர் அப்பாவு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. 

 

recount

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டார். வாக்குப்பதிவு இயந்திரங்களையும், தபால் வாக்குகளையும் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில் மொத்தம் 4 பெட்டிகளில் தபால் வாக்குகள், 19, 20, 21 சுற்றுகளில் வாக்கு பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் சென்னை உயர்நீதிமன்றதிற்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்திருந்தார். 

 

 Supreme Court bans Radhapuram re-count results

 

இன்று காலை 11.30 மணிக்கு உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வாக்கு எண்ணிக்கையில் ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதலில் 19,20 ,21 ஆம் சுற்று வாக்குகள் எண்ணும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.   

இது ஒருபுறம் இருக்க அதிமுக எம்எல்ஏவின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரவீந்திரன் பட்  அமர்வு  இன்று விசாரித்தது. இந்த விசாரணையில் உயர்நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டிருந்தாலும் வாக்குஎண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்கால தடையை விதித்து வழக்கை அக்.23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

 

 

சார்ந்த செய்திகள்