Skip to main content

கருத்துக் கணிப்பா? - தனியார் நிறுவன ஊழியர்களைத் தாக்கிய அமைச்சரின் ஆதரவாளர்கள்!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

Supporters of the minister who surrounded the survey team in Karur ...

 

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெல்லப்போவது யார்? என்ற விவாதம் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் காரசாரமாக விவாதிக்கப்படுவதோடு, கருத்துக் கணிப்புகள் வெளியாவதுமாக உள்ளது. மக்களிடம் கருத்தைக் கேட்டு அதை தேர்தல் முடிவாக வெளியிடும் பல்வேறு நிறுவனங்களும் பல தொகுதிகளில் கருத்துக் கணிப்புகள் நடத்தி வருகிறது. அப்படி ஒரு நிறுவனம் தான் பிடிஎஃப் (PDF) எனப்படும் தனியார் நிறுவனம். போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கரூர் தொகுதியில் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். 

 

கடந்த 30ந் தேதி மாலை பெரியகாளிபாளையம் என்ற ஊரில் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளார்கள். அப்போது அந்தப் பகுதிக்கு பிரச்சாரத்துக்கு வந்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். இந்நிலையில் கருத்துக் கணிப்பு நடத்திய இரண்டு இளைஞர்களைப் பிடித்த அதிமுகவினர் அவர்களிடமிருந்த செல்ஃபோனை பறித்துக் கொண்டனர். அதோடு கருத்துக்கணிப்பு நடத்திய ஃபாரங்களைப் பிடுங்கி உள்ளனர். அந்தப் பாரங்களில் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு அதிக ஆதரவு இருந்திருக்கிறது. இதனால், கொதிப்பான அ.தி.மு.க.வினர் அந்த ஃபாரங்களையெல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு கருத்துக்கணிப்பில் ஈடுபட்டுவந்த அந்த இரண்டு பேரையும் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

 

மேலும் அவர்களது செல்ஃபோனை கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் இருவரும் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வாங்கல் என்ற ஊரின் எஸ்.ஐ நாகராஜ் மற்றும் வெங்கமேடு என்ற பகுதியின் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் உங்களது செல்ஃபோனை நாங்கள் வாங்கித் தருகிறோம். இப்போது அமைதியாக இருங்கள் எனக் கூறியிருக்கிறார்கள். பிறகு இரவு 12 மணி வரை காவல் நிலையத்தில் அவர்கள் இருவரையும் அமர வைத்தும் செல்ஃபோனை போலீசாரும் கொடுக்கவில்லை. அவர்களது செல்ஃபோனை உள்ளூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி கோவர்தன் என்பவர் வைத்திருந்திருக்கிறார். இது சம்பந்தமாக கரூர் எஸ்.பியிடம் அவர்கள் முறையிட்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு செல்ஃபோனை வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்கள். மேலும் இவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவினர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் கூட வாங்க மறுத்துள்ளனர். கருத்துக்கணிப்பில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களுக்கு நேர்ந்ததை தேர்தல் ஆணையத்துக்குப் புகாராக அனுப்பியுள்ளார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.