Skip to main content

மீன்பிடி அனுமதி டோக்கன்கள் திடீர் ரத்து - வேதனையில் ராமேஸ்வரம் மீனவர்கள்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Sudden cancellation of fishing permit tokens-Rameswaram fishermen in agony

 

ராமேஸ்வரத்தில் முன்னறிவிப்பு இன்றி மீன்பிடி அனுமதி டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டதால் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழிலாளர்களுக்கான வார விடுமுறை நேற்று முடிந்து மீண்டும் இன்றைய வேலைநாள் தொடங்கிய நிலையில் மீன் பிடிக்க அனுமதி டோக்கன் வழங்கும் அலுவலகமானது மூடப்பட்டுள்ளது. வழக்கமாக எப்பொழுதும் காலை 6 மணிக்கே மீன் பிடிக்க அனுமதிக்கும் டோக்கனானது மீன்வள அதிகாரிகள் மூலம் வழங்கப்படும். இந்நிலையில், இன்று அதற்கான அலுவலகமே திறக்கப்படாத நிலையில் என்ன காரணம் என்று தெரியாமல் பல மணி நேரமாக மீனவர்கள் காத்திருந்தனர்.

 

ராமேஸ்வரம் துறைமுகத்தில் பைபர் படகுகள் மூலம் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரண்டு பைபர் படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட படகு உரிமையாளர்களிடம் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மீனவர்கள் சங்க தலைவரிடமும் இது குறித்து புகார் கொடுத்தும் அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் இன்று யாருக்குமே அனுமதி டோக்கன் கொடுக்கவில்லை என மீன்வள அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 

ஆனால், பாதிக்கப்பட்ட மீனவர்கள் தரப்பில் கூறுகையில். 'ராமேஸ்வரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்டவை சாதாரண சிறிய ரக படகுகள். நாங்கள் காலையில் சென்று மீன்பிடித்து விட்டு மாலையில் திரும்பும் சிறிய படகுகளை கொண்டவர்கள். எங்களுக்கு ஏன் மீன்பிடி டோக்கனை தரவில்லை. பைபர் படகுகளுக்கு அனுமதி இல்லை என்றால் அரசு நடவடிக்கை எடுக்கட்டும். மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கட்டும். அதைவிடுத்து அப்பாவி மீனவர்களான எங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஏன் மீன்பிடி அனுமதி டோக்கனை தராமல் உள்ளார்கள்' என வேதனை தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.