Skip to main content

பத்திரப்பதிவுக்கு 50 ஆயிரம் லஞ்சம் வசூல்; சார்பதிவாளர் கைது!  

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

sub Registrar arrested collecting sub Registrar arrested collecting 50 thousand bribe for deed registration 50 thousand bribe deed registration

 

சேலத்தில், பத்திரம் பதிவு செய்ய 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வசூலித்த சார்பதிவாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.    

 

சேலம் அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். கொழிஞ்சிப்பட்டியில் இவருடைய தாயார் பெயரில் 17 சென்ட்  பரப்பளவில் காலி நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்ற முடிவு செய்துள்ளார். இதையடுத்து உடையாப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த சேலம் கிழக்கு பதிவுத்துறை அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பித்துள்ளார். அதன்பேரில், சம்பந்தப்பட்ட இடத்தை தாதகாப்பட்டி பிரிவு பத்திரப்பதிவு சார்பதிவாளர் செல்வபாண்டியன் (52) நேரடியாகச் சென்று  பார்வையிட்டார். அப்போது அவர், குறிப்பிட்ட அந்த சொத்தை பெயர் மாற்றம் செய்வதில் வில்லங்கம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

 

மேலும், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எந்த வில்லங்கமும் இல்லாமல் உடனடியாக சொத்தை பெயர் மாற்றம் செய்து தருவதாகவும்  கூறியுள்ளார். லஞ்சப் பணத்தை வசூலிக்கவே தனக்கான உதவியாளராகப் பத்திர எழுத்தர் கண்ணன் என்பவரை நியமித்துள்ளார். அவர் மூலமாக லஞ்சப் பணத்தை கொடுத்து அனுப்பும்படியும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பழனிவேல், இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். சார்பதிவாளர் செல்வபாண்டியனுக்கு வலைவிரித்த லஞ்ச ஒழிப்புப் பிரிவினர், ரசாயன பவுடர் தடவப்பட்ட 50 ஆயிரம் ரூபாயை  பழனிவேலிடம் கொடுத்து அனுப்பினர்.  

 

பிப். 6ம் தேதி காலை பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற பழனிவேல், கொண்டலாம்பட்டியில் வைத்து பத்திர எழுத்தர் கண்ணனிடம் கொடுத்தார். அங்கிருந்து பத்திரப் பதிவு அலுவலகத்திற்குச் சென்ற கண்ணன், அந்தப் பணத்தை சார்பதிவாளர் செல்வபாண்டியனிடம் கொடுத்துள்ளார். அதை ஆவலுடன் வாங்கிய செல்வபாண்டியனை, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் பாய்ந்து சென்று கையும் களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். லஞ்சம் வசூலித்துக் கொடுத்த பத்திர எழுத்தர் கண்ணனையும் கைது செய்தனர்.     

 

இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக, மருத்துவப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் செல்வபாண்டியனுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் உடனடியாக  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பத்திர எழுத்தர் கண்ணன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.