Skip to main content

‘மாணவர்கள் விடுமுறை எடுத்தால் தப்ப முடியாது’ - சட்டமன்றத்தில் அமைச்சர் புதிய திட்டம்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

'Students can't escape if they take vacation' Minister's new plan in Assembly

 

2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று யுகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், நேற்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் தொடங்கி நடைபெற்றது.

 

இன்று காலை 10 மணிக்கு வினாக்கள்-விடைகள் விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் உரிய பதில்களை அளித்தார்கள். இந்நிகழ்வு முடிந்த பின் நேரமில்லா நேரம் நிகழ்வு துவங்கியது. அப்போது எதிர்க்கட்சியினர் தங்களது பிரச்சனைகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளைக் குறித்து கேள்வி எழுப்பினார்கள். நேரமில்லா நேரம் முடிந்த பின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும். கட்சி சார்ந்த பிரதிநிதிகள் மானியக்கோரிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிப்பார்கள். இத்துடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று முடிவடையும்.

 

இந்நிலையில் இன்று நடந்த வினாக்கள்-விடைகள் நிகழ்வில் பொதுத்தேர்வில் 50000 மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு தேர்விற்கு பதிவு செய்த அத்தனை பேரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்கள். அன்று இதன் மூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தான் இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களாக உள்ளனர். 2021-2022 கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பில் தேர்விற்கு பதிவு செய்த மாணவர்களில் 8 லட்சத்து 85 ஆயிரத்து 51 மாணவர்களில் 41 ஆயிரத்து 366 மாணவர்கள் வருகை புரியவில்லை. 83 ஆயிரத்து 811 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர்களும் வருகை புரியாதவர்களும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 177 மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்விற்கு வருகை தராத 47 ஆயிரத்து 947 மாணவர்களில் 40 ஆயிரத்து 509 மாணவர்கள் முந்தைய ஆண்டு 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு வருகை புரியாத தேர்ச்சி பெறாத மாணவர்கள். 

 

நீண்டகாலம் வருகை புரியாத மாணவர்களையும் இடைநிற்றல் மாணவர்களையும் பள்ளிக்கல்வி முறையில் இருந்து வெளியேறாமல் இருந்திட அனைத்து மாணவர்களுக்கும் பதிவுப்பட்டியலில் இடம் கொடுக்க வேண்டும் எனக் கருதப்பட்டது. மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வருகைப் பதிவேட்டில் எவ்வித வரைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் வாய்ப்பு அளிக்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொழுது குறைந்தபட்ச வருகை பதிவு 75% சதவீதம் பின்பற்ற வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

 

வரும் கல்வியாண்டில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ளவர்களாக கருதி அவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் மாணவர்களின் விவரப்பட்டியல் எமிஸ் தளத்தில் கண்காணிக்கப்படும் தலைமை ஆசிரியர் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார். 2 வாரத்தில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் வட்டார மைய ஆசிரியர் பயிற்றுநர் எமிஸ் தளத்தில் அம்மாணவர்களின் விவரங்கள் காண்பிக்கப்படும். ஆசிரியர் பயிற்றுநர் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வர். 3 வாரத்தில் 9 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் எமிஸ் தளத்தில் மாணவரின் விவரப்பட்டியல் காண்பிக்கப்படும். 4 வாரங்களுக்கும் மேல் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் இடைநிற்றல் வாய்ப்புள்ளதாக அம்மாணவர்களை கருதி பொதுத்தேர்வு தளப்பட்டியலில் அம்மாணவர்களை சேர்ப்பர். இடைநின்ற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில ஆலோசனைகள் வழங்கப்படும்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எல்லோருக்கும் எல்லாம் அதுதான் திராவிட மாடல் அரசு” - அமைச்சர் அன்பில் மகேஷ் பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Minister Anbil Mahesh campaigned Everything for everyone is the Dravidian model govt

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 39, 40, 41, 42 ஆகிய வார்டு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

அப்பொழுது திருவெறும்பூர் பகுதி கழகத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் வேட்பாளர் துரை வைகோ ஆகியோருக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் மத்தியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- எல்லோருக்கும் எல்லாம் என்று அமையப்பெற்றது தான் நமது திராவிட மாடல் ஆட்சி. இந்த திராவிடமாடல் ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காகவே அரும்பாடு பட்டு ஆட்சி செய்து கொண்டிருப்பவர் நமது தமிழக முதல்வர். இந்தியா கூட்டணி வெற்றிபெறும் பொழுது ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் முழுவதும் அகற்றப்படும். தற்போது மார்ச் மாதம் வரை மாணவர்கள் வாங்கியுள்ள கல்விக் கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். பெண்கள் தான் நாட்டின் கண்கள் என தமிழக முதல்வர் அடிக்கடி கூறி வருகிறார். ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்க கூடியவர்கள் பெண்கள் தான் . ராகுல் காந்தியும் நமது தமிழக முதல்வரும் அண்ணன் தம்பியாய் இருந்து வருகின்றனர். எனவே மத்தியில் இந்தியா கூட்டணியான ஆட்சி அமைந்தால்தான் நமக்கு உண்டான அனைத்து கோரிக்கைகளையும் நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். நமக்குத் தேவையான நிதியைப் பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அமைத்து நிறைவேற்ற முடியும்.

இன்றைக்கு பெட்ரோல் டீசல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய பாசிச பாஜக ஆட்சியை முற்றிலுமாக அகற்ற வேண்டும். தமிழக முதல்வர் கூறியது போல் மத்தியில் யார் வரவேண்டும் என்பதை காட்டிலும் மத்தியில் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல் தான் இந்தத் தேர்தல். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான, சமத்துவநாளில் அவர் எழுதிய அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், மோடியை மக்கள் அனைவரும் தூக்கி எறிய வேண்டிய தேர்தல் தான் இது.  எனவே மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்து நாம் வாங்கும் 500 ரூபாய் சிலிண்டரை அடுப்பில் பற்ற வைக்க வேண்டும் என்றால் அதற்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என பொதுமக்களாகிய உங்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரக் கூட்டத்தில் மாநகரச் செயலாளரும், மண்டல தலைவருமான மதிவாணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன், திருவெறும்பூர் பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சிவகுமார், 41 வது வட்ட செயலாளர் அப்பு என்கின்ற கருணாநிதி, 42 வட்டச் செயலாளர் புண்ணியமூர்த்தி தேர்தல் பொறுப்பாளர்களான மறைமலை, தனசேகர் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்ல மண்டி சோமு, தமிழ் மாணிக்கம் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Next Story

“தொழிலாளர்களின் குரலாக ஒலிக்க துரை வைகோவுக்கு வாக்களியுங்கள்” - அன்பில் மகேஷ்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Vote Durai Vaiko to be the voice of workers says Anbil Mahesh

இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ம.தி.மு.க. சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் துரை வைகோவுக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மாலை அணிவித்தும், பூக்களைத் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தொண்டர்கள் புடைசூழ வேட்பாளர் துரை வைகோ நேற்று பிரச்சாரம் செய்து தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பொன்மலை ரெயில்வே பணிமனையின் ஆர்மரிகேட் பகுதியில் ரெயில்வே ஊழியர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். தொடா்ந்து பெரியார், அம்பேத்கர், மகாத்மா காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரச்சார பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து, பொன்மலை அடிவாரம், ஜீவாவீதி, கொட்டப்பட்டு காமன்மேடை, ஐஸ்வர்யாநகர், ரன்வேநகர், எம்.ஜி.ஆர்.நகர், பேன்சிநகர், பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், திருமலைநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, கம்பிகேட், மிலிட்டரி காலனி ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- தி.மு.க. என்றும் தொழிலாளர்கள் பக்கம் தான் நிற்கும். அதுபோல் தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்றால் அங்கெல்லாம் வைகோ வந்து, அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார். நெய்வேலியில் 30 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களில் ஒளிவிளக்கை ஏற்றியவர் வைகோதான். அந்த வகையில் அவருடைய மகன் துரை வைகோ தான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தொழிலாளர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

பிரசாரத்தில் தி.மு.க. மாநகர செயலாளர் மு.மதிவாணன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன், மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழககுமார், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநிலத் தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில ஆபத்துதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநிலச் செயலாளர் கேப்டன் சுபாஷ் ராமன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருச்சி கிழக்கு மாநகரம், கிழக்கு தொகுதிக்குட்பட்ட கமான் வளைவு, சந்து கடை, அந்தோணியார் கோவில் தெரு, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தனர்.