திண்டுக்கல் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
பள்ளிக் கட்டடம் பழுதடைந்து இருந்ததால் நடப்பு கல்வி ஆண்டில் புதிய பள்ளிக் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி எம்.வி.எம் கல்லூரி பின்புறம் உள்ள வசந்தம் நகரில் கட்டடம் கட்டப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நேற்று ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில், மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த பள்ளி நடப்பு கல்வி ஆண்டு முதல் வசந்தம் நகரில் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பள்ளிக்கு சென்று வர போதிய பேருந்து வசதி இல்லை. அதனால் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி மாணவர்கள் கூறுகையில், “பல்வேறு கிராமங்களில் இருந்து வரும் தங்களுக்கு மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பள்ளியே அருகில் உள்ளது. அதனால் அந்த பள்ளி கட்டடத்தை சீரமைத்து அதே இடத்தில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை என்றால் நாங்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணிப்பு செய்வோம்” என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் ஒருபுறம் கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த ஆதீனம் அரசியல் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாநகரில் உள்ள கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மற்றும் அபிராமி அம்மன் திருக்கோவில்களுக்கு அடுத்தபடியாக செல்லாண்டியம்மன் திருக்கோவில் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவில் கடந்த சில வருடங்களாக புதுப்பிக்கப்பட்டு நாளை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அதோடு இக்கோவில் மஹா கும்பாபிஷேகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் உட்பட அறநிலையத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
செல்லாண்டியம்மன் திருக்கோவில் அபிராமி அம்மன் திருக்கோவில் கட்டுப்பாட்டில் இருப்பதால், அபிராமி அம்மன் கோவிலில் இருந்து யாகசாலைக்கான தீர்த்தக் குடம் பக்தர்கள் மூலம் எடுத்து வந்து யாக பூஜை கடந்த மூன்று நாட்களாக நடந்தது. அதில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகாவியம், கணபதி, நவக்ரஹ மகாலட்சுமி ஹோமங்கள், கோ, கஜ, அஸ்வ பூஜைகள் நடத்தி தீபாராதனை நடந்தது. மாலையில் முதற்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் 3ம் கால யாக பூஜை நடந்தது.
அதையொட்டி திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாணதேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் யாகசாலைக்கு வருகை தந்தார். அவரை பக்தர்கள் மலர்தூவி வரவேற்று யாகசாலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுவாமிகள் அமர்ந்து சொற்பொழிவு ஆற்றியபோது, நாடு சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து தான் செங்கோல் பெறப்பட்டது.
கடந்த 75 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடியின் பெரும் முயற்சிக்குப் பின் மீண்டும் நம்மிடம் செங்கோல் பெற்று புதிய பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது பெருமையான விசயம். அந்த செங்கோல் ஆட்சி மீண்டும் வந்துள்ளது. அதனால் மீண்டும் பிரதமராக மோடி வருவார் என்று கூறினார். ஆனால் ஆன்மீக சொற்பொழிவுக்கு வந்த திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாணதேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் அரசியல் பேசியது பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்வாதிகள், அதிகாரிகள், நடிகர்கள் உட்படப் பலதரப்பட்ட மக்களும் கடந்த சில மாதங்களாகவே கருங்காலி மாலையைப் போட்டி போட்டுக்கொண்டு அணிந்து வருகிறார்கள். அந்த அளவுக்கு கருங்காலி மாலைகளை அணிவதற்கு என்ன காரணம் என்பதை அறிய விசாரணையில் இறங்கினோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் அருகே இருக்கும் ராமலிங்கம்பட்டியில் பாதாள செம்பு முருகன் கோவில் உள்ளது. இக்கோவில் மற்ற கோவில் போல் இல்லாமல் பூமிக்கடியில் 16 அடி ஆழத்தில் செம்பு உலோகத்தால் முருகன் காட்சியளிப்பதால் பாதாள செம்பு முருகன் கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதுபோல் இக்கோவிலில் மற்ற முருகன் கோவில்களுக்கு மாலை அணிவிப்பது போல் இந்த செம்பு முருகனுக்கு மாலையெல்லாம் அணிவித்து பூஜை செய்வது கிடையாது. அதற்குப் பதிலாக கருங்காலி மாலையை அணிவித்து தான் பூஜையே செய்வார்கள். அப்படி பூஜை செய்த கருங்காலி மாலையைத்தான் முருக பக்தர்களுக்கும் வழங்கி வருகிறார்கள். அதனால் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்தும் வந்து செல்கிறார்கள்.
பாதாள செம்பு முருகனுக்கு பூஜை செய்யப்பட்ட கருங்காலி மாலையை அணிவிப்பதின் மூலம் ராகு - கேது, செவ்வாய் தோஷங்கள் நீங்கும். அதுபோல் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியமும் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், சொத்துக்களும் சேரும். குலதெய்வங்கள் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதுபோல் உடல் நலத்திற்கும் நல்லது. அதனாலேயே முருக பக்தர்கள் உள்படப் பலதரப்பட்ட மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகிறார்கள். இதில் பிரபல இயக்குநர் பாரதிராஜா, தனுஷ், சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐயா வீரமணி உட்பட நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினருமே கருங்காலி மாலையை ஆர்வமாக வாங்கி அணிந்து வருகிறார்கள். இதனால் கோவிலில் கருங்காலி மாலைக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது.
அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலர், வெளியூரிலிருந்து வரும் பக்தர்களிடம் செம்பு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட கருங்காலி மாலை என்று கூறி ரெட்டியார்சத்திரம், ஸ்ரீராமபுரம், மூலச்சத்திரம், திண்டுக்கல் உட்பட சில பகுதிகளில் நின்று கொண்டு மூன்றாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை போலியான கருங்காலி மாலைகளை விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் தினசரி 300க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் போலியான கருங்காலி மாலையை வாங்கிச் சென்று பல ஆயிரங்களை இழந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட கருங்காலி மாலைகள் ஒரு சில நாட்களிலேயே கலர் போய் வெளுத்து விடுகிறது. அந்த அளவுக்கு சாயம் கலந்த போலி கருங்காலி மாலையை பக்தர்களுக்கு கொடுத்து ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் ஒரிஜினல் கருங்காலி மாலை கருநிறத்தில் சாயம் போகாமல் இருக்கும் என்றனர் அப்பகுதியைச் சேர்ந்த பாதாள செம்பு முருகன் பக்தர்கள் சிலர்.
அறிவானந்த சுவாமி
இது சம்பந்தமாக பாதாள செம்பு முருகன் கோயிலின் அறங்காவலர் அறிவானந்த சுவாமிகளிடம் கேட்டபோது, “இறைவனுக்கு எப்படி பூ மாலைகள் சாத்தி வழிபடுவது வழக்கமோ, அதுபோல பாதாள செம்பு முருகனுக்கு தொன்றுதொட்டு செவ்வாய் பகவானுக்கு உரிய கருங்காலி மாலைகளை பூஜை செய்து பக்தர்களுக்குக் கொடுத்து வருகிறோம். ஒரிஜினல் கருங்காலி குச்சிகளை வெளிநாடான ஆப்ரிக்கா மற்றும் அரியானா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து வாங்கி கருங்காலி மாலையாக தயார் செய்து முருகனுக்கு பூஜை செய்த பின் பக்தர்களுக்குக் குறைந்த விலையில் கொடுத்து வருகிறோம். அதிலேயும் உடல் ஊனமுற்றோருக்கு இலவசமாக கொடுத்து வருகிறோம். இந்த கருங்காலி மாலைகளைப் பக்தர்கள் அணிவதன் மூலம் உடல்நலத்தில் எந்த ஒரு நோய் இருந்தாலும் அதைத் தீர்க்கக்கூடிய சக்தியாக இருந்தும் வருகிறது. அதனால் பக்தர்கள் ஆர்வமாக கருங்காலி மாலையை வாங்கி வருகிறார்கள். ஆனால் பக்தர்கள் அதிகமாக வருவதால் கருங்காலி மாலையை பூஜை செய்து கொடுப்பதில் குறைந்தது 18 மணி நேரமாவது தேவைப்படுகிறது. ஆனால் எங்களால் கருங்காலி மாலையை பூஜை செய்யாமல் கொடுக்கவும் முடியாது.
காலப்போக்கில் உடனடியாக பக்தர்களுக்கு கருங்காலி மாலை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். அதனால் தான் பக்தர்களுக்கு கருங்காலி மாலை பூஜை செய்வதில் காலதாமதமும் ஏற்பட்டு வருகிறது. அதனால் சில பக்தர்கள் மன வருத்தமும் அடைகிறார்கள். இப்படிப்பட்ட பக்தர்கள் ராமலிங்கம்பட்டி ஊர் எல்லையில் இருந்து எல்லப்பட்டி வரை அமைதியாகச் சென்று போனாலே கருங்காலி மாலைகளுக்கு கிடைக்கக்கூடிய பலன்களும் கிடைக்கும். ஆனால் கருங்காலி மாலைகள் உடனே பக்தர்களுக்கு கிடைக்காததால் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பலர் போலியான கருங்காலி மாலைகளை பக்தர்களிடம் கொடுத்து ஏமாற்றி பல ஆயிரங்களை தினசரி சம்பாதித்தும் வருகிறார்கள். இதற்கு எங்கள் கோவில் நிர்வாகம் பொறுப்பு கிடையாது. கோவிலைத் தவிர எங்கும் கருங்காலி மாலை விற்பனை செய்வது கிடையாது. அதனால் பக்தர்கள் போலியை நம்பி ஏமாறாதீர்கள்” என்று கூறினார்.