Skip to main content

தெருநாய் தொல்லை; சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Stray dog ​​infestation; Chennai Corporation Action Order

 

அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்து 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஈரோட்டிலும், சிவகங்கையிலும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டி பகுதியில் வீட்டில் புகுந்த நாய் ஒன்று 65 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடித்துக் குதறியது. பின்னர் வெளியே வந்த அந்த நாய், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியது. இதில் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் உட்பட ஏழு பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிவகங்கையில் காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெரு நாய்க்கடி காரணமாக பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்நிலையில் சென்னையில் 15 மண்டலங்களில் மாநகராட்சியால் கணக்கிடப்பட்டுள்ள சுமார் 93 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரு குழு நாள் ஒன்றுக்கு 130 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவர் எனவும், ஒவ்வொரு குழுவிலும் ஒரு கால்நடை மருத்துவர் நான்கு நாய் பிடிக்கும் பணியாளர்கள், உதவியாளர்கள் இருவர் இடம் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த மூன்று வருடத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்துள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட தெரு நாய்களுக்கு வண்ண சாயம் பூசப்பட்டு அதே இடத்தில் மீண்டும் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்